வியாபாரியிடம் பணம் திருடிய வாலிபர் கைது

ரெயில் நிலையத்தில் வியாபாரியிடம் பணம் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
வியாபாரியிடம் பணம் திருடிய வாலிபர் கைது
Published on

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த ஜாப்ராபாத் பகுதியை சேர்ந்தவர் அப்துல் (வயது 38). இவர் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ஓடும் ரெயிலில் டிபன் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று கோவையிலிருந்து சென்னை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் அப்துல், டிபன் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் அப்துல் பாக்கெட்டில் வைத்திருந்த 1,000 ரூபாயை திருடிக் கொண்டு ரெயிலிலிருந்து தப்பி ஓடி உள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அப்துல் கூச்சல் போடவே பயணிகள் விரட்டி சென்று அந்த நபரை பிடித்து ரெயில்வே போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். விசாரணையில் அவர் சேலம் மாவட்டம் ஏற்காடு அடுத்த ஒண்டிக்கடை பகுதியை சேர்ந்த அந்தோணி ராஜ் என்பவரின் மகன் தினேஷ் என்கிற தினேஷ்குமார் (31) என்பது தெரியவந்தது. அவரை ரெயில்வே போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com