ராணி 2ஆம் எலிசபெத் வாழ்ந்த வின்ட்சர் கோட்டை மீண்டும் திறப்பு: நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் பார்வையிட்ட மக்கள்!
ராணி இரண்டாம் எலிசபெத் அடக்கம் செய்யப்பட்டுள்ள வரலாற்று சிறப்புமிக்க புனித ஜார்ஜ் தேவாலயம் மீண்டும் திறக்கப்பட்டது.;
Image Credit:AFP
லண்டன்,
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் செப்டம்பர் 8 அன்று காலமானார். ராணியின் மரணத்தை தொடர்ந்து, வின்ட்சர் அரண்மனை உட்பட அரச குடும்பத்தின் அரண்மனைகள் மற்றும் குடியிருப்புகள் மூடப்பட்டுள்ளன.
ராணியின் கணவர் இளவரசர் பிலிப், அவரது தங்கை இளவரசி மார்கரெட்டின் அஸ்தியும் அங்கே அடக்கம் செய்யப்பட்டுள்ள 'மன்னர் ஆறாம் ஜார்ஜ் நினைவு தேவாலயத்துக்கு' ராணி இரண்டாம் எலிசபெத் சவப்பெட்டி மாற்றப்பட்டது.
இந்த நிலையில், ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த வாரம் அடக்கம் செய்யப்பட்டுள்ள பாரம்பரியமிக்க அரச குடும்பத்தின் இல்லம் மற்றும் அதன் வரலாற்று சிறப்புமிக்க புனித ஜார்ஜ் தேவாலயம் மீண்டும் திறக்கப்பட்டது.
இதனையடுத்து, லண்டனுக்கு மேற்கே உள்ள வின்ட்சர் அரண்மனையை பார்வையிட, கோட்டைக்கு வெளியே நூற்றுக்கணக்கான மக்கள் அணிவகுத்து நின்றனர். சுற்றுலாப் பயணிகளின் கையில் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளுடன், கோட்டையின் ஆடம்பரமான சுவர்களுக்கு வெளியே உள்ள குறுகிய தெருக்களில் நீண்ட வரிசையில் நின்று உள்ளே சென்று பார்வையிட்டனர்.