கொரோனா, உக்ரைன் போரின்போது இந்திய அரசு பெரும் உதவிகளை செய்தது: ஷேக் ஹசீனா புகழாரம்

கொரோனா பெருந்தொற்று, உக்ரைன் போரின்போது பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு பெரும் உதவிகளை செய்தது என வங்காளதேச பிரதமர் புகழ்ந்து பேசியுள்ளார்.
கொரோனா, உக்ரைன் போரின்போது இந்திய அரசு பெரும் உதவிகளை செய்தது: ஷேக் ஹசீனா புகழாரம்
Published on

டாக்கா,

வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில், அவர் ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில், கொரோனா பெருந்தொற்று விரைவாக பரவிய காலத்தில் நட்பு ரீதியிலான அடிப்படையில் அண்டை நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு வழங்கி பெரும் உதவிகளை செய்து இன்முகம் காட்டியது என கூறியுள்ளார்.

வேற்றுமைகள் இருப்பினும், அவற்றை பேச்சுவார்த்தை வழியே தீர்த்து கொள்ள வேண்டும். இந்தியா மற்றும் வங்காளதேசம் ஆகிய இரு நாடுகளும் அதனையே செய்தன. இரு நாடுகளுக்கும் இடையே நெருங்கிய ஒத்துழைப்பு காணப்படுகிறது என அவர் வலியுறுத்தி பேசியுள்ளார்.

வங்காளதேச குடிமக்களுக்கு இந்திய அரசு ஆதரவாக நின்ற இரண்டு விசயங்களை அவர் குறிப்பிட்டு பேசினார். அதில், ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போரின்போது, வங்காளதேச மாணவர்கள் பலர் சிக்கி தவித்தனர். பின்பு போலந்துக்கு வந்தனர்.

அவர்களை இந்திய மாணவர்களை மீட்டதுபோல், மீண்டும் சொந்த நாட்டுக்கு கொண்டு வந்து சேர்த்தது இந்திய அரசு. இந்த தொடக்க முயற்சிக்காக பிரதமருக்கு (மோடி) நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன். உண்மையில்... தெளிவாக நட்பு ரீதியிலான நல்லிணக்கம் காட்டியுள்ளீர்கள் என இந்திய அரசை அவர் பாராட்டியுள்ளார்.

சார்க் நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பு போதவில்லை என பல மேற்கத்திய நாடுகள் குறிப்பிடுவது பற்றி கேட்டதற்கும் ஹசீனா பதிலளித்து உள்ளார். வங்காளதேசம் மட்டுமின்றி, சில தெற்காசிய நாடுகளுக்கும் கொரோனா தடுப்பூசிகளை வழங்கி, உண்மையில் மிக மிக உதவியாக பிரதமர் மோடி இருந்ததற்கு அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

அதுதவிர்த்து, நாங்கள் சொந்த பணம் கொடுத்தும் தடுப்பூசிகளை வாங்கினோம். பிற நாடுகளும் வங்காளதேசத்திற்கு தேவையான தடுப்பூசிகளை வழங்கி பங்காற்றின என ஹசீனா கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com