கனடாவில் கோவில் உண்டியலில் இருந்து பணம் திருட்டு - இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் கைது
கோவில்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்குள் நுழைந்த பணத்தை திருடியதாக ஜெகதீஷ் பாந்தர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.;
கோப்புப்படம்
ஒட்டாவா,
கனடாவின் பீல் பகுதியில் கடந்த ஆண்டு மார்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் அங்குள்ள 3 கோவில்களின் பூட்டை உடைத்து உண்டியலில் இருந்து பணம் திருடப்பட்டதாக போலீசாரிடம் புகார்கள் அளிக்கப்பட்டன. இது தொடர்பாக சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த விசாரணையின் முடிவில், பிராம்ப்டன் பகுதியைச் சேர்ந்த 41 வயதான இந்திய வம்சாவளி நபர் ஜெகதீஷ் பாந்தர் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். கோவில்கள் மட்டுமின்றி, மேலும் 2 வணிக நிறுவனங்களுக்குள்ளும் நுழைந்து பணத்தை திருடியதாக ஜெகதீஷ் பாந்தர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அதே சமயம் கைது செய்யப்பட்ட நபர் பணத்தை திருடுவதற்கான நோக்கத்துடனேயே வழிபாட்டுத் தலங்களுக்குள் நுழைந்துள்ளார் எனவும், இது வெறுப்பினால் தூண்டப்பட்ட குற்றச்செயல் அல்ல என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.