உலகளவில் முடங்கிய இன்ஸ்டாகிராம் சேவை- வருத்தம் தெரிவித்த நிறுவனம்
தங்களது கணக்குகளை கையாள்வதில் பயனர்கள் சந்தித்து வரும் சிரமத்திற்கு இன்ஸ்டாகிராம் நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.;
Image Courtesy: AFP
சென்னை,
இளைஞர்களிடையே மிகப் பிரபலமான சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் உலகளவில் திடீரென முடங்கியுள்ளது. இதை தொடர்ந்து அதனை பயன்படுத்த முடியவில்லை என டுவிட்டர் போன்ற பிற சமூக வலைத்தளங்களில் பயனர்கள் பலர் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் பயனர்கள், தங்களது கணக்குகள் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தங்களுக்கு செய்தி வந்ததாக புகாரளித்துள்ளனர். மேலும் சிலர் தங்களது கணக்குகளில் பாலோவர்ஸ் எண்ணிக்கை பெரிதும் குறைந்து வருவதாகவும் பெரிய வீழ்ச்சியை காட்டுவதாகவும் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் இந்த புகார் குறித்து இன்ஸ்டாகிராம் நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இன்ஸ்டாகிராம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், 'உங்களில் சிலருக்கு உங்கள் இன்ஸ்டாகிராம் கணக்கை அணுகுவதில் சிக்கல் இருப்பதை நாங்கள் அறிவோம். நாங்கள் அதை ஆராய்ந்து வருகிறோம், சிரமத்திற்கு வருந்துகிறோம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.