ஈகுவடோரியல் கினியாவில் மார்பர்க் வைரஸ் பரவலுக்கு 9 பேர் பலி; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஈகுவடோரியல் கினியா நாட்டில் மார்பர்க் வைரசின் பரவல் ஏற்பட்டு 9 பேர் பலியாகி உள்ளனர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.
ஈகுவடோரியல் கினியாவில் மார்பர்க் வைரஸ் பரவலுக்கு 9 பேர் பலி; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
Published on

மலாபோ,

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஈகுவடோரியல் கினியா நாட்டில் மார்பர்க் வைரசின் பரவல் பற்றி தெரிந்ததும் அதுபற்றி அந்நாடு உலக சுகாதார அமைப்பிடம் தெரிவித்து உள்ளது.

இதனை தொடர்ந்து தடுப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த வைரசானது, எபோலா வைரசால் ஏற்படும் பாதிப்புகளை ஏற்படுத்த கூடிய அதே குடும்ப வகையை சேர்ந்தது. அதிக பரவும் தன்மை கொண்ட, 88 சதவீதம் உயிரிழப்பு ஏற்படுத்த கூடியது.

இதனால், தீவிர காய்ச்சல், கடுமையான தலைவலி மற்றும் உடல்நலம் மோசமடைவது உள்ளிட்ட பாதிப்புகள் காணப்படும். நோயாளிகள் பலருக்கு 7 நாட்களில் கடுமையான ரத்த கசிவு அறிகுறிகளும் ஏற்படும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இந்த நிலையில், தொற்று ஏற்பட்டு உயிரிழந்த 9 பேரின் மாதிரிகளை பரிசோதனை செய்ததில், அவர்களுக்கு மார்பர்க் வைரசின் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், ஈகுவடோரியல் கினியா நாட்டில் மார்பர்க் வைரசின் பரவல் அறிவிக்கப்பட்டு உள்ளது.

நோய் பாதித்த மாவட்டங்களில் தொடர்புடைய நபர்கள் மற்றும் அறிகுறிகளுடன் கூடியவர்களை கண்டறிந்து, அவர்களை தனிமைப்படுத்தி, மருத்துவ சிகிச்சை அளிக்க குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 500 சுகாதார பணியாளர்கள் பயன்படுத்த கூடிய பாதுகாப்பு உபகரணங்களை உலக சுகாதார அமைப்பு வழங்கி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com