வரி ஏய்ப்பு வழக்கில் இருந்து நோபல் பரிசு பெற்ற பத்திரிகையாளர் மரியா ரெஸ்ஸா விடுவிப்பு

நோபல் பரிசு பெற்ற பத்திரிகையாளர் மரியா ரெஸ்ஸாவை வரி ஏய்ப்பு வழக்கில் இருந்து பிலிப்பைன்ஸ் கோர்ட்டு விடுவித்துள்ளது.
வரி ஏய்ப்பு வழக்கில் இருந்து நோபல் பரிசு பெற்ற பத்திரிகையாளர் மரியா ரெஸ்ஸா விடுவிப்பு
Published on

மனிலா,

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பத்திரிக்கையாளரும், 'ராப்லர்' என்ற செய்தி நிறுவனத்தின் நிறுவனருமான மரியா ரெஸ்ஸா, கடந்த 2021-ம் ஆண்டு கருத்து சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளுக்காக நோபல் பரிசை பெற்றார்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்டே, அந்நாட்டில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டார். அப்போது காவல்துறையின் அத்துமீறல்கள் காரணமாக 6.200 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான தகவல்களை மரியா ரெஸ்ஸாவின் 'ராப்லர்' பத்திரிக்கை ஆதாரப்பூர்வமாக வெளியிட்டு வந்தது.

இந்த சூழலில் மரியா ரெஸ்ஸா மீது பிலிப்பைன்ஸ் அரசாங்கம் வரி ஏய்ப்பு சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது. வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் கூட்டு சேர்ந்து நிதி திரட்டிய போது ரெஸ்ஸாவும், அவரது 'ராப்லர்' நிறுவனமும் வரி செலுத்தாமல் ஏமாற்றியதாக பிலிப்பைன்ஸ் அரசாங்கம் குற்றம் சாட்டியது.

அரசியல் காரணங்களுக்காக தன் மீதான ஆதாரமற்ற முறையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக மரியா ரெஸ்ஸா கூறினார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை பிலிப்பைன்ஸ் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் எதிர்மனுதாரர்கள் உரிய ஆதாரத்தை வழங்காததால் ரெஸ்ஸா மற்றும் அவரது செய்தி நிறுவனத்தை வழக்கில் இருந்து நீதிபதிகள் விடுவித்தனர். ஒருவேளை குற்றம் நிரூபிக்கப்பட்டிருந்தால் 34 ஆண்டுகள் வரை அவர் சிறைத் தண்டனை பெற்றிருக்கக் கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com