இப்படி நடக்கும் என நினைக்கவில்லை - டொனால்டு டிரம்ப் கருத்து

இப்படி நடக்கும் என நினைக்கவில்லை என்று கைது பற்றி டொனால்டு டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
இப்படி நடக்கும் என நினைக்கவில்லை - டொனால்டு டிரம்ப் கருத்து
Published on

வாஷிங்டன்,

ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் நியூயார்க் கோர்ட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், தனது கைது பற்றி டொனால்டு டிரம்ப் கூறுகையில், "அமெரிக்காவில் எனக்கு இப்படி நடக்கும் என நான் எதிர்பார்க்கவே இல்லை. வழக்கில், குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. நான் நிரபராதி. நம் நாடு நரகத்திற்கு போகிறது. நான் செய்த ஒரே குற்றம், நம் தேசத்தை அழிக்க நினைப்பவர்களுக்கு எதிராக அச்சமின்றி பாதுகாத்ததுதான்" என்று கூறினார். மேலும் ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்தது உட்பட தன் மீதான 34 குற்றச்சாட்டுகளையும் டிரம்ப் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் கைதானது எப்படி..?

அமெரிக்க முன்னாள் அதிபரான டிரம்ப் மீது 10-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் புகார் தெரிவித்ததோடு, வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்டு இருந்தனர். இதனிடையே ஆபாச பட நடிகை ஒருவர் டிரம்புடனனான உறவு குறித்து அவர் வெளியிட்ட புத்தகத்தில் பதிவு செய்திருந்தார். இந்த குற்றச்சாட்டை எல்லாம் டிரம்ப் திட்டவட்டமாக மறுத்தாலும், கடந்த 2016-ம் ஆண்டு, ஜனாதிபதி தேர்தல் சமயத்தில், இந்த குற்றச்சாட்டு வெளியாகியிருந்தது. அதனால், அதன் தாக்கம் தேர்தலில் அதிகமாக எதிரொலிக்கவே செய்தது.

அதிபர் தேர்தல் நடைபெற இருந்த சூழலில் ஆபாசபட நாயகியுடனான பழக்கம் வைரலான நிலையில், அது டிரம்பிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து ஸ்டோர்மி டேனியல்ஸை பேச விடாமல் இருக்க 1 லட்சத்து 30 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் டிரம்ப் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அந்த தொகை டிரம்பின் தேர்தல் வரவு-செலவு கணக்கில் சட்டரீதியிலானதாக பதிவு செய்யப்பட்டிருப்பதாக கிரிமினல் வழக்கு பதியப்பட்டுள்ளது. அந்த கிரிமினல் வழக்கில் டொனால்ட் டிரம்பிற்கு எதிரான ஆவணங்கள் உறுதியாக உள்ளதாகவும், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் எனவும் தகவல்கள் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் கோர்ட்டில் நடந்து வருகிறது. இதற்காக முன்னாள் அதிபர் டிரம்ப் நியூயார்க் கோர்ட்டில் ஆஜர் ஆனார். அங்கு அவர் சட்டமுறைப்படி கைது செய்யப்பட்டார். அவரிடம் கைரேகை பதிவு செய்யப்பட்டது. ஆனால் விலங்கு மாட்டப்படவில்லை. டொனால்டு டிரம்ப் கோர்ட்டில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com