ஷின்ஜோ அபே மற்றும் ஜப்பானை நினைவு கூர்கிறோம்: பிரதமர் மோடி

நான் கடந்த முறை ஜப்பான் வந்தபோது, முன்னாள் பிரதமருடன் நீண்ட உரையாடல் மேற்கொண்டேன் என அந்நாட்டுக்கு சென்ற பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ஷின்ஜோ அபே மற்றும் ஜப்பானை நினைவு கூர்கிறோம்: பிரதமர் மோடி
Published on

டோக்கியோ,

ஜப்பான் நாட்டில் நீண்ட காலம் பிரதமர் பதவி வகித்தவர் ஷின்ஜோ அபே (வயது 67). அங்கு நரா என்ற இடத்தில் கடந்த ஜூலை மாதம் 8-ந்தேதி நடந்த தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் டெட்சுய யமகாமி என்பவரால் சுட்டு கொல்லப்பட்டார். இது அந்த நாட்டை உலுக்கியது.

ஷின்ஜோ அபேயின் இறுதிச்சடங்கு 12-ந்தேதி டோக்கியோவில் நடந்தது. அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இந்த நிலையில் ஷின்ஜோ அபே நினைவு நிகழ்ச்சி, அந்த நாட்டின் அரசு சார்பில் இன்று டோக்கியோவில் நடத்தப்படுகிறது.

இதில் பங்கேற்க இந்தியா உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடப்பட்டு உள்ளது. ஜப்பானின் அழைப்பை ஏற்று, ஷின்ஜோ அபே நினைவு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, டெல்லியில் இருந்து ஜப்பான் புறப்பட்டு டோக்கியோ நகரை சென்றடைந்துள்ளார்.

ஜப்பான் சென்றடைந்த பிரதமர் மோடியை ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா முறைப்படி வரவேற்றார். இதனை தொடர்ந்து இருநாட்டு தலைவர்களின் இருதரப்பு சந்திப்பு நடந்தது. இதுபற்றி பிரதமர் மோடி கூறும்போது, துயரம் நிறைந்த இந்த நேரத்தில் எங்களது இன்றைய சந்திப்பு நடைபெறுகிறது.

கடந்த முறை நான் ஜப்பான் நாட்டிற்கு வந்தபோது, முன்னாள் ஜப்பானிய பிரதமர் ஷின்ஜோ அபேவுடன் நீண்டநேரம் உரையாடினேன். அவரை இந்தியா இழந்துள்ளது. அவரையும், ஜப்பானையும் நாங்கள் நினைவுகூர்கிறோம் என்று தெரிவித்து உள்ளார். இந்த பயணத்தில் பிரதமர் மோடி, ஷின்ஜோ அபேயின் மனைவியை சந்தித்து பேசுகிறார். அப்போது இந்திய மக்களின் சார்பில் அவர் இரங்கலை தெரிவித்து கொள்கிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com