இந்தியா-ஆஸ்திரேலியா கடைசி ஒருநாள் கிரிக்கெட்: சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் 18-ந்தேதி டிக்கெட் விற்பனை...!

இந்தியா-ஆஸ்திரேலியா கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் மார்ச் 22 அன்று நடைபெறுகிறது.

Update: 2023-03-10 03:14 GMT

சென்னை,

சென்னையில் வருகிற 22-ந் தேதி நடைபெறும் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் வருகிற 18-ந்தேதி நடக்கிறது. ஆன்லைனில் விற்பனை வருகிற 13-ந்தேதி தொடங்குகிறது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடர் முடிந்ததும் இவ்விரு அணிகள் இடையே 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது.

இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி மும்பையில் 17-ந் தேதியும், 2-வது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் 19-ந் தேதியும், 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் வருகிற 22-ந் தேதியும் (பிற்பகல் 1.30 மணிக்கு) நடக்கிறது.

சென்னையில் நடக்கும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் 13-ந் தேதி தொடங்குகிறது. ஆன்லைன் விற்பனை பேடிஎம் மற்றும் www.insider.in ஆகிய இணையதளங்கள் மூலம் நடைபெறும் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ஆர்.ஐ. பழனி அறிவித்துள்ளார்.

போட்டிக்கான டிக்கெட் விலை குறைந்தபட்சமாக ரூ.1,200 ஆகவும், அதிகபட்சமாக ரூ.10,000 (சொகுசு பாக்ஸ்) ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ.1,500, ரூ.3,000, ரூ.5,000, ரூ.6,000 ஆகிய விலைகளிலும் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.

சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் உள்ள கவுண்ட்டர்களில் நேரடி டிக்கெட் விற்பனை வருகிற 18-ந்தேதி காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேரடி விற்பனையில் குறைந்தபட்ச விலையிலான ரூ.1,200 (சி, டி, இ, ஸ்டாண்டு கீழ்தளம்) டிக்கெட் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது. மற்ற டிக்கெட்டுகளை ஆன்லைன் வாயிலாகவே வாங்க முடியும்.

இந்த போட்டியை நேரில் காண வரும் ரசிகர்களுக்கு வழக்கம் போல் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கிறது. கேமரா, லேப்டாப், ஹெல்மெட், பேக், குடை உள்ளிட்ட பொருட்களை ரசிகர்கள் தங்களுடன் ஸ்டேடியத்துக்குள் எடுத்து வர அனுமதி கிடையாது, மேலும் உணவு, குளிர்பானம், பிளாஸ்டிக் பைகள், சிகரெட், புகையிலை பொருட்கள் ஆகியவைகளை கொண்டு வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

2019-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு பிறகு சென்னையில் சர்வதேச ஒருநாள் போட்டி நடைபெறுவது இதுவே முதல்முறையாகும். இதனால் இந்த போட்டியை நேரில் காண ரசிகர்கள் ஆர்வமுடன் காத்து இருக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்