எம்.ஜி.ஆருக்கும் ரசிகர்களுக்குமான உறவு குறித்து நடிகர் கார்த்தி பேச்சு
கார்த்தி, கீர்த்தி ஷெட்டி நடித்த ‘வா வாத்தியார்’ படம் வருகிற 12ந் தேதி வெளியாகிறது.;
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. இவர் தனது 26-வது படமாக ‘வா வாத்தியார்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். "சூது கவ்வும், காதலும் கடந்து போகும்" உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ் கிரண், ஆனந்த் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் 12-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
இந்தப் படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றிய நடிகர் கார்த்தி, `“வா வாத்தியார் படத்தில் மிகவும் பக்தியுடன் நடித்திருக்கிறேன். இந்த படம் பார்க்கும்போது எம்.ஜி.ஆருக்கும் அவரின் இரத்தத்தின் இரத்தமான ரசிகர்களுக்கும் என்ன உறவு இருந்ததுனு நீங்க புரிஞ்சிகிட்டாலே, பெரிய சக்சஸ். ஒரு ரசிகனுக்கும் அவனுடைய தலைவனுக்கும் இருக்கிற அந்த உறவுதான் இந்த படத்தோட கோர் எமோஷன். எம்.ஜி.ஆர் மாதிரி மேக்கப் போடும்போது அவ்வளோ பயமா இருக்கும்.
எம்.ஜி.ஆரை ஏன் வாத்தியார்ன்னு சொல்றாங்க... எத்தனை சூப்பர் ஸ்டார் வந்தாலும் எல்லாத்துக்கும் பாதை போட்டு கொடுத்தது அவர்தான். அதனால் அவர்தான் வாத்தியார். இன்னைக்கு இருக்கிற ஸ்டன்ட் யூனியன், நடிகர் சங்கம்னு எத்தனையோ சின்ன சின்ன யூனியன் ஆரம்பிச்சது அவர்தான். எப்பவுமே அடுத்தவங்க நல்லா இருக்கணும்னு ஒவ்வொரு திட்டத்தையும் பிளான் பண்ணது அவராதான் இருக்காரு. எல்லாத்துக்கும் முன்னோடியா அவர்தான் இருந்திருக்கார்” எனக் பேசியுள்ளார்.