விசாரணைக்கு ஆஜராக வேண்டும்: நடிகர் ஸ்ரீகாந்துக்கு 2-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன்
நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் மீது முறைகேடான பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.;
சென்னை,
போதைப்பொருள் வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது ஜாமீனில் உள்ள அவர்கள் இருவர் மீதும் முறைகேடான பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளது. அவர்களை விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.
விசாரணைக்கு ஆஜராக கால அவகாசம் கேட்டு நடிகர் ஸ்ரீகாந்த் சார்பில் அமலாக்கத்துறையிடம் கடிதம் கொடுக்கப்பட்டது. ஆனால் நடிகர் கிருஷ்ணா அமலாக்கத்துறையின் சம்மனை ஏற்று விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் 7 மணி நேரத்துக்கு மேல் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
இந்த நிலையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகர் ஸ்ரீகாந்துக்கு 2-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த சம்மனை ஏற்று நடிகர் ஸ்ரீகாந்த் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.