திரைப்படத் தயாரிப்பாளர் ஏ.வி.எம் சரவணன் மறைவுக்கு அன்புமணி ராமதாஸ் இரங்கல்
திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.;
திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் ஏவிஎம் நிறுவனத்தின் நிறுவனத்தின் இயக்குநர் ஏவிஎம் சரவணன் (வயது 86) இன்று அதிகாலை 5.30 மணியளவில் வயது மூப்பின் காரணமாக காலமானார். இவரது உடல் ஏவிஎம் ஸ்டுடியோவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. இவரது உடல் இன்று மாலை 3 மணிக்கு மேல் ஏவிஎம் வளாகத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது. இவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
தமிழ்த் திரையுலகின் பிதாமகர்களில் ஒருவராக போற்றப்படும் ஏ.வி.மெய்யப்பச் செட்டியார் அவர்களின் புதல்வரும், புகழ்பெற்ற தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளருமான ஏ.வி.எம். சரவணன் அவர்கள் வயது மூப்பு காரணமாக சென்னையில் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
திரைப்படத் தயாரிப்பில் தந்தைக்கு உதவியாக இருந்து செயல்பட்ட ஏ.வி.எம். சரவணன் அவர்கள், தந்தைக்கு பிறகு ஏவிஎம் நிறுவனத்தை தலைமையேற்று நடத்தினார். தமிழ்த் திரையுலகில் பல புதுமைகளை புகுத்துவதற்கு காரணமாக இருந்த அவர், ஏராளமான கலைஞர்கள் தமிழ்த் திரையுலகில் நுழைவதற்கு காரணமாக இருந்தவர்.
எம்.ஜி.ஆர், கலைஞர், ஜானகி அம்மையார், ஜெயலலிதா, என்.டி.ஆர் ஆகிய 5 முதலமைச்சர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர். எங்கள் இல்ல விழாக்களில் பங்கேற்றவர். அமைதி, அடக்கம், எளிமை ஆகியவற்றுக்கு பெயர் பெற்றவர். இந்தியத் திரைப்படக் கூட்டமைப்பின் தலைவர், அகில உலகத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் துணைத்தலைவர், தமிழ்நாடு சுற்றுலா வாரியத்தின் பண்பாட்டுக் கழக இயக்குநர், சென்னை மாநகர செரீப், ஆகிய பொறுப்புகளை வகித்துள்ளார். தமிழக அரசின் கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.
பெரியவர் ஏ.வி.எம். சரவணன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், ஏவிஎம் நிறுவனப் பணியாளர்கள், திரையுலகினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.