நடிகை ஹேமா மீதான போதைப்பொருள் வழக்கு ரத்து- கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பு
போதைப் பொருட்களை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்த நடிகை ஹேமா மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.;
பெங்களூரு,
பெங்களூரு ஹெப்பகோடியில் உள்ள ஜி.ஆர். பார்ம் என்ற பண்ணை வீட்டில் கடந்த ஆண்டு (2024) மே மாதம் போதை விருந்து நடந்தது. இதில் பிரபல நடிகை ஹேமா உள்பட 88 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கைதான அனைவரும் எம்.டி.எம்.ஏ. மற்றும் கொகைன் உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தியதாக போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு பெங்களூரு கோர்ட்டில் நடந்து வந்தது.
இந்த நிலையில் நடிகை ஹேமா தன் மீதான வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி கர்நாடக ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை கர்நாடக ஐகோர்ட்டில் நீதிபதி முகமது நவாஸ் முன்னிலையில் நடந்தது. அப்போது நீதிபதி முகமது நவாஸ், இந்த வழக்கில் இருந்து நடிகை ஹேமாவை விடுவித்தார். அவர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் ரத்து செய்யப்பட்டன.