'எல்லா இயக்குனரும் அப்படி இருக்க ஆசைப்பட்டாங்க...அதனால் பல வாய்ப்புகளை இழந்தேன்’ - டாப்ஸி
ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் டாப்ஸி.;
சென்னை,
இந்திய சினிமா உலகில் ஒரு கதாநாயகியாக டாப்ஸி தனக்கென ஒரு பெயரைப் பெற்றுள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் பல வெற்றிப் படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்துள்ளார். ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான டாப்ஸி, அதன் பிறகு தொடர்ச்சியான வாய்ப்புகளைப் பெற்று ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார்.
நீண்ட காலமாக தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த டாப்ஸி, தற்போது பாலிவுட்டுக்கு சென்றுள்ளார். அங்கு தொடர் வெற்றிகளைப் பெற்று பிஸியாக இருக்கிறார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற டாப்ஸி, தனது சுருள் முடி காரணமாக பல வாய்ப்புகளை இழந்ததாக கூறினார்.
தனது தொழில் வாழ்க்கையின் ஆரம்ப நாட்களில், ஒவ்வொரு இயக்குனரும் தனது தலைமுடியை நேராக்கச் சொன்னதாகவும், இதனால், பல வாய்ப்புகளை இழந்ததாகவும் தெரிவித்தார். பின்னர் தனது தலைமுடியை நேராக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறினார்.
ஆனால், திரைப்படங்கள் மட்டுமல்ல, விளம்பர நிறுவனங்களும் தனது தலைமுடியை நேராக்கச் சொன்னது தனக்குப் பிடிக்கவில்லை என்றும் இதனால் அவற்றை நிராகரித்ததாகவும் அவர் கூறினார்.
டாப்ஸியின் இந்த கருத்து தற்போது வைரலாகி வருகிறது. டாப்ஸி கடைசியாக இந்தியில் அக்ஷய் குமாருக்கு ஜோடியாக கேல் கேல் மெய்ன் படத்தில் நடித்தார்.