நான் ஒன்றும் பெரிய பணக்காரன் இல்லை - நடிகர் விஷால்

கடன் வழக்கில் நடிகர் விஷால் 10 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.;

Update:2025-11-24 17:45 IST

சென்னை,

நடிகர் விஷால், தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம்  ரூ.21 கோடியே 29 லட்சம் கடன் வாங்கினார். அந்த கடனை லைகா நிறுவனம் அடைத்தது. அப்போது செய்து கொண்ட  ஒப்பந்தத்தின்படி, பணத்தை திருப்பிக் கொடுக்கும் வரை, விஷால் தயாரிக்கும் படத்தை லைகா நிறுவனத்திடம் கொடுக்கவேண்டும். ஆனால், ஒப்பந்தத்தை மீறி விஷால் தயாரித்த படத்தை வெளியிட முயற்சித்ததால், அவருக்கு எதிராக லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, கடன் தொகை ரூ.21 கோடியே 29 லட்சத்துக்கு 30 சதவீத வட்டியுடன் லைகா நிறுவனத்துக்கு விஷால் வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் விஷால் மேல்முறையீடு செய்தார்.

இந்நிலையில், விஷால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கு, இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒரு குறிப்பிட்ட தொகையை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யலாமே? என விஷால் தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த விஷால் தரப்பு மூத்த வழக்கறிஞர் ஏ.கே. பஸ்ரீராம், "15 கோடி ரூபாய் கடன் பெற்ற நிலையில், ஆண்டிற்கு 30 சதவீத வட்டியுடன் திரும்ப செலுத்த பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதம்" எனக்கூறினார். வட்டி தொகை மட்டும் 40 கோடி ரூபாய்க்கு மேல் வருவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், லைகா நிறுவனம் கூறுவது போல, விஷால் பெரிய பணக்காரர் இல்லை எனவும் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, குறுக்கிட்ட நீதிபதிகள், "அப்படியானால் 'திவாலானவர்' என அறிவிக்க தயாராக இருக்கிறீர்களா?" எனவும் விஷால் தரப்புக்கு கேள்வி எழுப்பினர். மேலும், 30 சதவீத வட்டி என்பது மிக அதிகம் எனவும் இப்படி சுரண்டப்படுவதை அனுமதிக்க முடியாது எனவும் நீதிபதிகள் கூறினர்.

இதனையடுத்து, லைகா நிறுவனத்திடம் பெற்ற கடனை வட்டியுடன் செலுத்த வேண்டுமென்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், 10 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய விஷால் தரப்புக்கு உத்தரவிட்டனர். மேலும், மனுவுக்கு லைகா நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்