“சமூக ஊடகங்களுக்கு நீங்கள் கட்டுப்பாடு விதிக்கவில்லை என்றால் அது உங்களை கட்டுப்படுத்தும்” - பிரியங்கா சோப்ரா

அபுதாபியில் நேற்று முதல் தேசிய கண்காட்சி அரங்கில் அமீரக தேசிய ஊடக கவுன்சிலின் ஆதரவில் சர்வதேச அளவிலான பிரிட்ஜ் மாநாடு நடந்து வருகிறது.;

Update:2025-12-09 20:15 IST

அபுதாபி,

சமூக ஊடகங்களை தொடர்புக்காக மட்டுமே பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று அபுதாபி தேசிய ஊடக கவுன்சிலின் ஆதரவில் நடத்தப்படும் பிரிட்ஜ் மாநாட்டில் நடிகை பிரியங்கா சோப்ரா பேசினார்.

அபுதாபியில் நேற்று முதல் தேசிய கண்காட்சி அரங்கில் அமீரக தேசிய ஊடக கவுன்சிலின் ஆதரவில் சர்வதேச அளவிலான பிரிட்ஜ் மாநாடு நடந்து வருகிறது.

இந்த மாநாட்டில் அமீரக மந்திரிகள், பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள், உலக அளவில் சிறந்து விளங்கும் தொழில்துறை நிபுணர்கள், படைப்புத்துறையை சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டு உரையாற்றி வருகின்றனர்.

இதில் 2-வது நாளான இன்று நடிகை பிரியங்கா சோப்ரா சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்டு சமூக ஊடகங்களின் பயன்பாடு குறித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

சமூக ஊடகங்களில் நான் எப்படி ஈடுபடுகிறேன்? எதில் கவனம் செலுத்துகிறேன்? எவற்றை புறக்கணிக்கிறேன்? என்பதை நானே தீர்மானிக்கிறேன். நான் சமூக ஊடகங்களை ரசிக்கிறேன். அது மிகவும் வேடிக்கையானதாக இருக்கும். மேலும் உலகம் முழுவதிலும் இருந்து பதிவிடப்படும் திறமைகள் மற்றும் படைப்பாற்றல்களை பார்ப்பதை விரும்புகிறேன். அதேநேரத்தில் அது எப்போது தீங்கு விளைவிக்கும்? எப்போது ஒப்பீடு செய்ய வைக்கும் என்பதையும் நான் அறிவேன். நீங்கள்தான் அதன் மீது கட்டுப்பாட்டை விதிக்க வேண்டும். இல்லையென்றால் சமூக ஊடகங்கள் உங்களை கட்டுப்படுத்தும்.

தொடர்ந்து சமூக ஊடகங்களில் ஸ்‌க்ரோலிங் செய்வது மற்றும் மற்ற பதிவுகளை ஒப்பிட்டு பார்ப்பது உங்கள் மனதின் நேரத்தை உறிஞ்சி விடும் என்பதை நினைவிற்கொள்ளுங்கள். உண்மையில் மற்றவர்கள் தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கும் போது, உங்களுக்கு இன்னும் போதாது என்பதை உணர வைத்து விடும். என்னை பொறுத்தவரை சமூக ஊடகம் என்பது ஒரு காரணத்திற்காக அவ்வாறு அழைக்கப்படும் கருவி. அதனை நாம் தொடர்புக்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டுமே தவிர, சரிபார்ப்புக்காக அல்ல. அதாவது எது சரி என்பதை ஒப்பிடுவதற்காக அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

உங்களின் கனவுகள், வளர்ச்சி மற்றும் மரபுகளில் கவனம் செலுத்துங்கள். மற்றவரின் பதிவில் கவனம் செலுத்தாதீர்கள் 'இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்