'காந்தாரா 2' படப்பிடிப்பில் தொடரும் அசம்பாவிதங்கள்.. தயாரிப்பாளர் விளக்கம்

காந்தாரா படம் குறித்து வதந்தியை பரப்புவதை நிறுத்துங்கள் என்று தயாரிப்பாளர் ஆதர்ஷ் தெரிவித்துள்ளார்.
'காந்தாரா 2' படப்பிடிப்பில் தொடரும் அசம்பாவிதங்கள்.. தயாரிப்பாளர் விளக்கம்
Published on

கன்னட திரைஉலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் ரிஷப் ஷெட்டி. இவர் இயக்கி நடித்த 'காந்தாரா' திரைப்படம் பெரும் வசூல் சாதனை படைத்தது. கன்னடம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு என பல மொழிகளிலும் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதையடுத்து ரிஷப் ஷெட்டி 'காந்தாரா சாப்டர்-1' என்ற தலைப்பின் காந்தாரா படத்தின் 2-ம் பாகத்தை எடுத்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு தற்போது கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி தாலுகா மாஸ்திகட்டே அருகே உள்ள மாணி அணை நீர்த்தேக்கப் பகுதியில் நடைபெற்றது. படப்பிடிப்புக்காக படக்குழுவினர் படகில் சென்ற போது படகு கவிழ்ந்ததாகவும் ரிஷப் ஷெட்டி, ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட படக்குழுவினர் நீச்சல் தெரிந்ததால் நீந்தி கரையேறி உயிர் பிழைத்ததாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதுகுறித்து படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் ஆதர்ஷ் கூறியதாவது:-

நாங்கள் சென்ற எந்த படகும் கவிழவில்லை. தற்போது படக்குழுவினர் மாஸ்திகட்டேயில் உள்ள மணி நீர்த்தேக்கத்தின் அருகில் படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். அங்கு ஒரு பெரிய படகு பின்னணியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. பருவமழை காரணமாக, அதன் மேல்பகுதி கவிழ்ந்தது. ஆனால் நடிகர்கள் மற்றும் குழுவினர் தரையில் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த நேரத்தில் யாரும் அந்த படகில் இல்லை. வனத்துறை, உள்ளூர் காவல்துறை, மற்றும் பஞ்சாயத்திடமிருந்து தேவையான அனைத்து அனுமதிகளையும் பெற்றோம். ஒவ்வொரு வதந்தியையும் காந்தாரா படத்துடன் இணைப்பதை நிறுத்துங்கள். ரசிகர்களுக்கு சிறந்த சினிமா அனுபவத்தை வழங்க நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம். கவனச்சிதறல் இல்லாமல் படக்குழு வேலை செய்ய அனைவரையும் அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com