கார்த்தியின் “வா வாத்தியார்” படத்தை வெளியிட இடைக்கால தடை
கார்த்தி நடித்த ‘வா வாத்தியார்’ படம் வரும் 12ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.;
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. இவர் தற்போது நலன் குமாரசாமி இயக்கத்தில் ‘வா வாத்தியார்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்திருக்கிறார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சத்யராஜ், ராஜ் கிரண் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற 12-ம் தேதி வெளியாகிறது.
சென்னை உயர் நீதிமன்ற சொத்தாட்சியர் தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், தொழிலதிபர் அர்ஜுன்லால் சுந்தர்தாஸ் என்பவர், திவாலானவர் என கடந்த 2014 ம் ஆண்டு அறிவித்து அவருடைய சொத்துக்களை நிர்வகிக்க சொத்தாட்சியரையும் நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. திவாலானவர் என அறிவிக்கப்பட்ட அர்ஜுன்லால் சுந்தர்தாஸிடம் இருந்து ஸ்டூடியோ கிரீன் படத் தயாரிப்பு நிறுவனம் 10 கோடியே 35 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தனர். அந்தத் தொகை வட்டியுடன் சேர்த்து தற்போது 21 கோடியே 78 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக உள்ளது. அந்தத் தொகையை செலுத்த ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் தயாரித்துள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படம் வெளியிட இடைக்காலத் தடை விதிக்கவும், படம் மூலம் கிடைக்கும் வருவாயை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரியும் சொத்தாட்சியர் மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ‘வா வாத்தியார்’ திரைப்படத்தை வருகிற 5ம் தேதி வரை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.