'ஜனநாயகன்' படம் தடைகளை உடைக்கும்: பராசக்தி இசையமைப்பாளர்
சர்ச்சைக்குரிய காட்சிகளினால் சென்சார் சான்றிதழ் (தணிக்கை சான்று) வழங்கவில்லை.;
சென்னை,
நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளினால் சென்சார் சான்றிதழ் (தணிக்கை சான்று) வழங்கவில்லை. இந்த படத்தை மறுஆய்வு குழு பார்க்க உள்ளதாக தணிக்கை வாரியம் கடந்த 5-ந்தேதி உத்தரவிட்டது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், படத்தை தயாரித்துள்ள கே.வி.என்.நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு கடந்த 7 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இன்று தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தார். இதன்படி, ஜனநாயகன் திரைப்படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய உத்தரவை ரத்து செய்து நீதிபதி பி.டி.ஆஷா உத்தரவிட்டுள்ளார். மேலும், ஜனநாயகன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க சென்சார் வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளார். ஜனநாயகனுக்கு எதிரான புகார் ஆபத்தானது; இதுபோன்ற புகார்களை ஊக்கப்படுத்த முடியாது எனவும் ஐகோர்ட்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நீதிபதி தீர்ப்பளித்த அடுத்த சில நிமிடங்களிலேயே உத்தரவுக்கு எதிராக சென்சார் போர்டு மேல்முறையீடு செய்துள்ளது. இதனால் ஜனநாயகன் படத்திற்கு உடனடியாக யு/ஏ சான்றிதழ் கிடைக்காது என்று கூறப்படுகிறது. மேலும் பொங்கலுக்கு படம் வெளியாகாது என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில்ம் ஜன நாயகன் படத்திற்கு பராசக்தி படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
ஜனநாயகன் தடைகளை கடக்கும்.. விரைவில் திரையில் மேஜிக் செய்யும். ஜனநாயகன் ரிலீஸ் தேதி தான் எல்லா ரசிகர்களுக்கும் பண்டிகை. என தெரிவித்துள்ளார்.