‘ஜனநாயகன்’ தணிக்கை சான்றிதழ் விவகாரம்: ஐகோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணை

‘ஜனநாயகன்’ படத்துக்கு எதிரான புகாரை தாக்கல் செய்ய வேண்டும் என தணிக்கை வாரியத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.;

Update:2026-01-07 03:55 IST

சென்னை,

"இயக்குநர் எச்.வினோத். விஜய்யை வைத்து 'ஜனநாயகன்' படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தின் எடிட்டிங் பணிகள் வரை முடிவடைந்து பொங்கல் வெளியீடாக வரும் 9-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இதில், நாயகியாக பூஜா ஹெக்டேவும் முக்கிய கதாபாத்திரத்தில் மமிதா பைஜூவும் நடித்துள்ளனர். மேலும் பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இந்த திரைப்படம் வருகிற 9-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. 'ஜனநாயகன்' படத்திற்கான அனைத்து பணிகளையும் முடித்து, படத்தை கடந்த மாதம் தணிக்கை வாரியத்திற்கு படக்குழு அனுப்பியது. ஆனால் இந்த படத்திற்கு இதுவரை தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை. தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாததை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், படத்தை தயாரித்துள்ள கே.வி.என். நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை அவசர வழக்காக ஐகோர்ட்டு நீதிபதி பி.டி.ஆஷா நேற்று பிற்பகலில் விசாரணைக்கு எடுத்தார்.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சதீஷ் பராசரன், வக்கீல் விஜயன் சுப்பிரமணியன் ஆகியோர், ''ஜனநாயகன் படத்தை சுமார் ரூ.500 கோடி செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லமால், 22 நாடுகளில் 4 மொழிகளில் வெளியாக உள்ளது. இதற்காக தணிக்கை சான்றிதழ் கேட்டு கடந்த டிசம்பர் 18-ந்தேதி விண்ணப்பம் செய்யப்பட்டது. இந்த திரைப்படத்தை தணிக்கை வாரிய உறுப்பினர்கள் பார்த்தனர்.

பின்னர், இந்த படத்துக்கு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கப்படும் என்றும், அதற்காக சில காட்சிகளை நீக்கவேண்டும். சில வசனங்களை மவுனமாக்கவேண்டும் என்று மண்டல தணிக்கை வாரிய அலுவலர் கடந்த டிசம்பர் 22-ந்தேதி உத்தரவிட்டார்.

இதை ஏற்றுக் கொண்டு, அந்த காட்சிகள் நீக்கப்பட்டன. வசனங்களும் மவுனமாக்கப்பட்டன. இதையடுத்து, தணிக்கை சான்றிதழ் வழங்கவேண்டிய நிலையில், திடீரென அந்த படத்தில் உள்ள காட்சிகள், வசனங்கள் குறித்து புகார் வந்துள்ளது. அதனால், இந்த திரைப்படத்தை தாணிக்கை வாரியத்தில் உள்ள 'மறுஆய்வு குழுவுக்கு' அனுப்பி வைத்துள்ளோம் என்று நேற்று முன்தினம் (5-ந்தேதி) இ-மெயில் மூலம் தணிக்கை வாரியம் தலைவர் தகவல் அனுப்பியுள்ளார்.

ஜனநாயகன் திரைப்படம் இன்னும் திரைக்கு வரவில்லை. அந்த படத்தை யாரும் பார்க்கவும் இல்லை. அப்படி இருக்கும்போது, அந்த படத்தில் உள்ள காட்சிகள், வசனங்கள் குறித்து புகார் செய்ய வாய்ப்பே இல்லை. யார் அப்படி ஒரு புகாரை கொடுத்துள்ளனர் என்பதும் தெரியவில்லை.

அதுமட்டுமல்ல, யு/ஏ சான்றிதழுக்கு பரிந்துரை செய்த தணிக்கை வாரிய தலைவரே, மறுஆய்வு குழுவுக்கு படத்தை அனுப்பி வைக்க அதிகாரம் இல்லை. இன்னும் 3 தினங்களில் உலகம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் படம் வெளியாகவுள்ள நிலையில், தணிக்கை சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிப்பது ஏற்புடையதல்ல. எனவே, தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும்'' என்று வாதிட்டனர்.

தணிக்கை வாரியம் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், ''ரூ.500 கோடிக்கு எடுத்த படமாக இருந்தாலும், ஒரு கோடி ரூபாய்க்கு எடுத்த படமாக இருந்தாலும், தணிக்கை வாரியத்துக்கு அனைத்து திரைப்படங்களும் ஒன்றுதான். மனுதாரர் 9-ந்தேதி திரைப்படத்தை வெளியிடுவதாக அறிவித்து விட்டார் என்பதற்காக அவருக்கு தணிக்கை சான்றிதழ் உடனே வழங்கி விடவேண்டும் என்று அவர் நிர்பந்தம் செய்யமுடியாது.

மத உணர்வை புண்படுத்தும் விதமான காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக புகார் வந்துள்ளதால், மறுஆய்வு குழுவுக்கு படம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தணிக்கை வாரியம் சட்டப்படிதான் செயல்படுகிறது. இந்த வழக்கில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும். விசாரணையை நாளை (வியாழக்கிழமை) தள்ளிவைக்கவேண்டும்'' என்று வாதிட்டார்.

இதற்கு மனுதாரர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கை இன்று (புதன்கிழமை) பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணைக்கு எடுக்கப்படும் என்று உத்தரவிட்ட நீதிபதி, அப்போது ஜனநாயகன் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ள புகார் மனு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் தணிக்கை வாரியம் தாக்கல் செய்யவேண்டும்'' என்று உத்தரவிட்டார். இதன்படி, இந்த வழக்கு ஐகோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்