கிச்சா சுதீப்பின் அதிரடி பதில்... இணையத்தில் குவியும் பாராட்டுகள்
கிச்சா சுதீப்பின் ‘மார்க்’ படம் வருகிற 25-ம் தேதி வெளியாகவுள்ளது.;
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் கிச்சா சுதீப். இவர் நான் ஈ, அருந்ததி, புலி ஆகிய திரைப்படங்களில் வில்லனாக நடித்து தமிழ் மக்களின் மனதில் பதிந்தார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான மேக்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தை விஜய் கார்த்திகேயா இயக்கினார். கிச்சா மீண்டும் விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் ‘மார்க்’ படத்தில் நடித்துள்ளார். இது கிச்சா சுதீப்பின் 47- வது திரைப்படமாகும். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.இப்படம் வருகிற வருகிற 25-ம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தின் புரோமோசன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டார்கள். அப்போது மேடையில் சுதீப், இயக்குநர் உள்ளிட்டோரை தாண்டி நாயகிகள் இருவரும் அமர்ந்திருந்தார்கள். அப்போது நாயகி ரோஷ்ணி பிரகாஷிடம், “மேடையில் ஓரமாக அமர்ந்திருக்கிறீர்கள். படத்திலும் அப்படித்தானா” என்று பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு ரோஷ்ணி பதிலளிக்கும் முன்பு சுதீப், “இந்த மாதிரி ஒரு கேள்வி கூட படப்பிடிப்பில் வரவில்லை. அதனால் தான் இப்படம் நன்றாக வந்திருக்கிறது” என்று கூறி நாயகிகள் இருவரையும் மேடைக்கு மத்தியில் வரவைத்து அமரவைத்தார்.
பின்பு மேடையில் வேண்டுமென்றே ஓரமாக அமரவைக்கவில்லை. தானாக அமைந்துவிட்டது என்று கூறிவிட்டு நாயகிகளிடம் மைக்கை கொடுத்துவிட்டார். ‘மார்க்’ படத்தில் நடித்தது குறித்து ரோஷ்ணி பேசிமுடித்தவுடன் மீண்டும் மைக்கில் சுதீப், “கேள்வி கேட்ட நபர் கூட முதலில் என்னிடம் தான் கேட்டார். ஓரமாக உட்கார்ந்திருந்த நாயகியை முதலில் பார்க்கவில்லை. கடைசியாக தான் நாயகியிடம் கேட்டார். முதல் கேள்வி நீங்கள் நாயகியிடம் கேட்டிருந்தால் உங்களுக்கு சல்யூட் செய்திருப்பேன். தப்பு இல்ல” என்று பேசினார் சுதீப்.
இந்த வீடியோ பதிவு பகிர்ந்து இணையத்தில் பலரும் ‘நல்ல பதிலடி’ என்று சுதீப்புக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.