நடிகை கவுரி கிஷனுக்கு மலையாள நடிகர் சங்கம் ஆதரவு
நடிகை கவுரியிடம் அநாகரிக கேள்வி எழுப்பிய யூடியூபருக்கு மலையாள நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.;
அபின் ஹரிஹரன் இயக்கி ஆதித்யா மாதவன், கவுரி கிஷன், அஞ்சு குரியன் ஆகியோர் நடித்துள்ள ‘அதர்ஸ்’ படம் இன்று முதல் திரைக்கு வருகிறது. சென்னையில் கடந்த வாரம் நடந்த பட விழாவில், ஆதித்யா மாதவனிடம் 'பாடல் காட்சியில் கதாநாயகி கவுரி கிஷனை தூக்கி ஆடினீர்களே... வெயிட்டாக இருந்தாரா? எவ்வளவு எடை இருந்தார்? என்று வேடிக்கையாக கேட்கப்பட்டது. இதையடுத்து யூ-டியூப் சேனல் பேட்டி ஒன்றில் பேசிய கவுரி கிஷன், இந்த கேள்வி குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதற்கிடையில் நேற்று நடந்த ‘அதர்ஸ்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கவுரி கிஷனிடம் இதுபற்றி கேட்கப்பட்டது. அப்போது கவுரி கிஷன் ‘இதுபோன்ற கேள்விகள் அபத்தமானது. இது டைரக்டரின் தேர்வு. நீங்கள் யார் கேள்வி கேட்பதற்கு?, என் உடல் எடை குறித்து கதாநாயகனிடம் கேட்கலாமா... இது உருவக்கேலி செய்வது போலத்தான். என் எடையை தெரிந்துகொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்?'', என்று ஆவேசப்பட்டார். இதையடுத்து பத்திரிகையாளர்களுக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது.
யூடியூபரின் கேள்விக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தனக்கு ஆதரவு தெரிவித்தவர்களுக்கு நடிகை கவுரி கிஷன் நன்றியும் கூறியுள்ளார். பத்திரிகையாளர் சந்திப்பில் துணிச்சலாக கேள்வி எழுப்பிய நடிகை கவுரி கிஷனை குஷ்பு பாராட்டியுள்ளார்.பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை கவுரி கிஷனிடம் தவறான கேள்வி எழுப்பிய யூ-டியூப்ருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில், நடிகை கவுரியிடம் அநாகரிக கேள்வி எழுப்பிய யூடியூபருக்கு மலையாள நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. “நடிகை கவுரியின் வலியை புரிந்து கொள்ள முடிகிறது. எவர் செய்தாலும், எப்போது, எங்கே செய்தாலும் பாடி சேமிங் தவறானது என்ற நம்பிக்கையில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.உடல் அவமதிப்பு ஒரு மனிதரின் மனநிலையை பாதிக்கும் செயல் என்பதால் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை கடுமையாக கண்டிக்கிறோம். நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டிய பொறுப்பு இருப்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்று மலையாள நடிகர் சங்கம் கூறியுள்ளது.