வாரணாசிக்கும் எனக்குமான தொடர்பு ... - தனுஷ்
தனுஷின் ‘தேரே இஷ்க் மெய்ன்’ பாலிவுட் படம் நாளை வெளியாகிறது.;
ராஞ்சனா, கல்யாண கலாட்டா படத்தை தொடர்ந்து பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் மூன்றாவது முறையாக தனுஷ் நடித்துள்ள படம் ‘தேரே இஷ்க் மெய்ன்’. இப்படம் இவர்கள் கூட்டணியில் முதலில் வெளியான ராஞ்சனா' படத்தின் கதையை மையப்படுத்தி உருவாகிறது. இப்படத்தில் கிரித்தி சனோன் நாயகியாக நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படம் நாளை வெளியாகிறது. இந்தியை தாண்டி தமிழ் மற்றும் தெலுங்கில் டப் செய்து வெளியாகிறது.
வாரணாசியில் உள்ள கங்கை கரையில் தனுஷ், கிரித்தி சனோன் மற்றும் ஆனந்த் எல்.ராய் ஆகியோர் கங்கா ஆரத்தி செய்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.இது தொடர்பாக பேசிய தனுஷ், “பனாரஸ் (வாரணாசி) இல்லாமல் ஆனந்த் எல். ராயால் எந்தப் படத்தையும் எடுக்க முடியாது என நினைக்கிறேன். பனாரஸ் எப்போதும் எங்கள் படத்தின் ஒரு பகுதியாகும். நாங்களும் பனாரஸின் ஒரு பகுதியாக இருக்கிறோம். இந்தப் படத்திற்கும் பனாரஸுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. இந்த இடமும் அதனுடன் இருக்கும் தொடர்பும் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது” என்றார்.
இந்த நிலையில், ‘தேரே இஷ்க் மெய்ன்’ படத்தின் புரமோஷனுக்காக வாரணாசி சென்றுள்ள தனுஷ் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “எல்லாம் எங்கு தொடங்கியதோ அந்த நினைவுப்பாதையில் நடக்கிறேன். குந்தன் (ராஞ்சனாவில் தனுஷ் பெயர்) என்கிற ஒரு கதாபாத்திரம் தசாப்த காலத்திற்கும் மேலாக என்னைவிட்டு விலக மறுத்துக்கொண்டே இருக்கிறது. பனாரஸின் குறுகிய வீதிகளில் மக்களால் இன்னும் குந்தனின் பெயர் எதிரொலிக்கும்போது நான் புன்னகையுடன் திரும்பிச் சிரிக்கிறேன்.
இப்போது அதே வீதிகளில், அதே வீட்டின் முன்பே, அதே தேநீர் கடையில், புனித கங்கை கரையில் குந்தன் கதாபாத்திரத்தை உருவாக்கியவருடன் நடந்தபோது முழுமையடைந்ததைப் போல உணர்ந்தேன். இந்த முறை இது ஷங்கருக்கான நேரம். தேரே இஷ்க் மெய்ன். நாளை வெளியாகிறது. ஹர ஹர மகாதேவ்” என பதிவிட்டுள்ளார்.