பாடல் காப்புரிமை வழக்கு: இளையராஜாவுக்கு ஆதரவாக ஆர்.கே.செல்வமணி சாட்சியம்
இளையராஜா தனது பாடல்களின் காப்புரிமையை என்றைக்குமே தயாரிப்பாளர்களுக்கு வழங்கியது இல்லை என்று இயக்குநர் ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார்.;
1976-ம் ஆண்டு வெளியான ‘அன்னக்கிளி’ திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்து அசத்தி வருகிறார். பல்வேறு மொழிகளில் 1,500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில், 8,500-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் லண்டனில் தனது கனவு படைப்பான 'வேலியண்ட்' சிம்பொனியை கடந்த ஆண்டு அரங்கேற்றி உலக சாதனை படைத்தார்.
கடந்த 2010ம் ஆண்டு ‘மியூசிக் மாஸ்டர்’ இசை நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தது. அதில், ‘பாண்டியன், குணா, தேவர் மகன்’ போன்ற 109 திரைப்படங்களின் பாடல்கள் மற்றும் அந்த படங்களின் இசை வெளியீட்டு உரிமையை இளையராஜாவின் மனைவி ஜீவா நடத்திய இசை நிறுவனத்திடம் இருந்து தாங்கள் பெற்றுள்ளோம். ஆனால் எங்களுடைய அனுமதியில்லாமல் அந்த பாடல்களை யூட்யூப் மற்றும் சமூக வலைதளங்களில் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்” கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கில் இளையராஜா நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்திருந்தார். இதையடுத்து இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது இளையராஜா தரப்பில் 1997ம் ஆண்டு ஒப்பந்தம் செய்த போது யூடியூப் மற்றும் சமூக வலைதளங்கள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும் ஆடியோ ரிலீஸ் தொடர்பாக மட்டுமே ஒப்பந்தம் செய்யப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று நடந்த வழக்கு விசாரணையில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி இன்று நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். இளையராஜா தனது பாடல்களின் காப்புரிமையை என்றைக்குமே தயாரிப்பாளர்களுக்கு வழங்கியது இல்லை; பாடல்கள் அவருக்கே சொந்தம். படத்தில் பாடலை பயன்படுத்தும் உரிமையை மட்டுமே தயாரிப்பாளர்களுக்கு அவர் வழங்கியுள்ளார் என்று விசாரணையில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார். இதையடுத்து வழக்கின் விசாரணை வரும் 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.