ரசிகர்களை “தம்பி - தங்கைகள்” என அழைக்க இதுதான் காரணம் - சிவகார்த்திகேயன்

என் ரசிகர்கள் கடவுளையும், அப்பா - அம்மாவை வணங்கினால் போதும் என்று சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.;

Update:2025-12-02 04:23 IST

சென்னை வடபழனியில் ‘பேன்லி’ எனும் செயலியின் அறிமுக விழா நடைபெற்றது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன், உலக செஸ் சாம்பியன்ஷிப் குகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அந்நிகழ்வில் சிவகார்த்திகேயன் பேசும் போது, “இந்த மேடையில் இருந்த 3 பேருக்குமே மூளை அதிகம், எனக்கு குறைவு. அதனாலேயே நடிகராக இருக்க முடிகிறது. மூளை அதிகமாக இருந்திருந்தால் இயக்குநரை டார்ச்சர் செய்ய ஆரம்பத்திருப்பேன். இப்போது அவர்கள் சொல்வதை கேட்டு நடித்து வருகிறேன். எனக்கு எப்போதுமே என்னை வணங்கும் ரசிகர்கள் தேவையில்லை. அவர்கள் கடவுளையும், அப்பா - அம்மாவை வணங்கினால் போதும். என்னுடன் அன்பாக பேசுவதையும், அண்ணனாக பழக வேண்டும் என்பதையே ஆசைப்படுகிறேன். அதனாலேயே எப்போதுமே தம்பி - தங்கைகள் என்று அழைக்கிறேன்.

இப்போது சமூக வலைதளத்தைப் பார்த்தாலே அனைவருக்கும் பயம் வருகிறது. அனைத்து சமூக வலைதளத்திலும் எனது பெயரில் கணக்கு இருக்கிறது. அதை வேறொருவர் தான் நிர்வாகித்து வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கம் மட்டுமே அவ்வப்போது சென்று வந்தேன். அதிலும் தவறுகள் செய்வதால் இப்போது அந்தப் பக்கமும் போவதில்லை. இப்போது எதிர்மறை கருத்துகள் தான் வைரலாகிறது என்பதால் அதை தான் விளம்பரம் செய்கிறார்கள். பொய்யாவது ஏதேனும் சொல்வோம், அதை தான் நிறையப் பேர் பார்ப்பார்கள் என நினைக்கிறார்கள்” என்று பேசினார் சிவகார்த்திகேயன்.

தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்