“வா வாத்தியார்” படம் எம்.ஜி.ஆருக்கு சமர்பணமாக இருக்கும் - கீர்த்தி ஷெட்டி
கார்த்தி, நலன் குமாரசாமி கூட்டணியில் உருவாகியுள்ள ‘வா வாத்தியார்’ படம் வரும் 12ம் தேதி வெளியாக உள்ளது.;
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'மெய்யழகன்'. இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து, நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி தனது 26வது படமான ‘வா வாத்தியார்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குனர் நலன் குமாரசாமி, "சூது கவ்வும், காதலும் கடந்து போகும்" உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
‘வா வாத்தியார்’ படத்தில் நடிகர் கார்த்தி எம்.ஜி.ஆர் ரசிகனாக நடித்துள்ளார். இதில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், ராஜ் கிரண் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் 12ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் ‘வா வாத்தியார்’ பட நாயகி கீர்த்தி ஷெட்டி “படத்தில் என்னுடைய கதாபாத்திரம் மர்மம் நிறைந்ததாக இருக்கும். ஆன்மாக்களை படிக்கும் ஒரு கதாபாத்திரம். இது போன்ற ஒரு கதாப்பாத்திரம் இந்திய சினிமாவில் நான் பெரிதாக பார்த்ததில்லை. இந்தப்படம் எம்ஜிஆருக்கு ஒரு சமர்பணமாக இருக்கும். எல்லாருக்கும் அவரைப் பற்றி தெரியும். அதே நேரம் இன்றைய தலைமுறையினருக்கு பெரிதாக அவரைப்பற்றி தெரியாது. தனிப்பட்ட முறையில் எனக்கு எம்ஜிஆரை மிகவும் பிடிக்கும். அவரைப்பற்றி நான் கேள்விப்படும் போது, அவர் மற்றவர்களுக்கு நல்ல பண்ண வேண்டும் என்று நினைப்பவர் சொல்லியுள்ளனர். மிகப்பெரிய மீடியாமான சினிமாவை நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்த வேண்டும். அதனை அவர் செய்துள்ளார்” என்றார்.