"சூர்யா 47" படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
`ஆவேஷம்' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த மலையாள இயக்குனர் ஜித்து மாதவன் இந்தப் படத்தை இயக்குகிறார்.;
சென்னை,
சூர்யாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அவரது 47வது படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. `ஆவேஷம்' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த மலையாள இயக்குனர் ஜித்து மாதவன் இந்தப் படத்தை இயக்குகிறார். இதனால், எதிர்பார்ப்புகள் ஏற்கனவே விண்ணை எட்டியுள்ளன.
இப்படத்தில் சூர்யாவுடன், 'பிரேமலு' ஹீரோ நஸ்லேன் மற்றும் நடிகை நஸ்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சுஷின் ஷ்யாம் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.
`ஆவேஷம்' போன்ற ஒரு மாஸ் எனர்ஜியான படத்திற்குப் பிறகு இப்படத்தை இயக்கும் ஜித்து மாதவன், சூர்யாவை எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் காட்டப்போகிறார் என்பதைப் பார்க்க ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் ஆவலுடன் காத்திருக்கிறது.
இந்த நிலையில், இப்படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனமாக நெட்பிளிக்ஸ் மிகப்பெரிய தொகைக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாக உள்ளது.
இதற்கிடையில், நடிகர் சூர்யா ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் 'கருப்பு' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது. அதனை தொடர்ந்து வெங்கி அட்லுரி இயக்கத்தில் 'சூர்யா 46' படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.