மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அஷ்டமி சப்பர விழா கோலாகலம்

மீனாட்சி அம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுத்து வருகின்றனர்.;

Update:2026-01-11 09:16 IST

மதுரை,

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை மாதம் மாசி வீதிகளில் நடைபெறும் தேர் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தவை. அதன்பின்னர் மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று வெளிவீதிகளில் நடைபெறும் அஷ்டமி சப்பர திருவிழா பிரசித்தி பெற்றவை. இத்திருவிழா உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் இறைவன் படியளந்த லீலையை குறிக்கும் நிகழ்ச்சியாக கொண்டாடப்படுகிறது.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த அஷ்டமி சப்பர திருவிழா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி காலை 5 மணிக்கு சுந்தரேசுவரர் பிரியாவிடையுடனும், மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து புறப்படாகி கீழமாசி வீதி வந்தடைந்தனர். பின்னர் சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் தனித்தனியாக தேர்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இந்த தேர்கள், கீழமாசி வீதியில் இருந்து புறப்பட்டு யானைக்கல், கீழவெளி வீதி, தெற்குவெளிவீதி, கிரைம்பிராஞ்ச், திருப்பரங்குன்றம் சாலை, மேலவெளிவீதி, குட்ஷெட் தெரு, வக்கீல் புதுத்தெரு வழியாக இருப்பிடத்தை சென்றடையும். மீனாட்சி அம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுத்து வருகின்றனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தேர்கள் வீதிஉலாவின் போது இறைவன் அனைத்து உயிர்களுக்கும் படியளப்பதை விளக்கும் விதமாக அரிசியை வீதிகளில் போட்டு வருவார்கள். திருவிழாவிற்கு செல்பவர்கள் கீழே சிதறி கிடக்கும் அரிசியை எடுத்து கொண்டு வீட்டில் வைத்து வேண்டிக்கொண்டால் அள்ள, அள்ள அன்னம் கிடைத்து பசி எனும் நோய் ஒழியும் என்பது நம்பிக்கை. 

Tags:    

மேலும் செய்திகள்