மயிலாடுதுறை காவிரி துலா உற்சவம்.. பரிமள ரெங்கநாதர் கோவிலில் தேரோட்டம்
108 வைணவ திவ்ய தேசங்களுள் 22-வது தலமாகவும், பஞ்ச அரங்கங்களில 5-வது அரங்கமாகவும் மயிலாடுதுறை திருவிழந்தூர் பரிமளரங்கநாதர் கோவில் திகழ்கிறது.;
காவிரி நதியில் ஐப்பசி மாதம், கங்கை முதலான புண்ணிய நதிகள் கலந்து ஓடுவதாக ஐதீகம். இதனை முன்னிட்டு, மயிலாடுதுறையில் காவிரியை மையப்படுத்தி கோவில்களில் துலா உற்சவம் நடைபெறும். அவ்வகையில் இந்த ஆண்டின் துலா உற்சவம் கடந்த 7-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
108 வைணவ திவ்ய தேசங்களுள் 22-வது தலமாகவும், பஞ்ச அரங்கங்களில 5-வது அரங்கமாகவும் திகழும் மயிலாடுதுறை திருவிழந்தூர் பரிமளரங்கநாதர் கோவிலிலும் ஐப்பசி மாத காவிரி துலா உற்சவம் விமரிசையாக நடைபெற்று வருகிறது.
உற்சவத்தின் 10-ம் நாளான இன்று தேரோட்டம் நடந்தது. இதனை முன்னிட்டு ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் பரிமளரெங்கநாதர் தேரில் எழுந்தருள செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. ஏராளமான பக்தர்கள் கலந்துகொணடு ‘கோவிந்தா, பரிமள ரெங்கநாதா, நாராயணா’ என பக்தி முழக்கம் எழுப்பியபடி வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேரோட்டத்தின்போது மழை பெய்தது. சிலர் மழையில் நனைந்தபடியும், சிலர் குடை பிடித்துக் கொண்டும் தேர் இழுத்தனர்.
நான்கு வீதிகளையும் சுற்றி வந்த தேர் மீண்டும் நிலையை அடைந்தது. இதனைத்தொடர்ந்து மதியம் பரிமளரங்கநாத பெருமாள் காவிரி மண்டபத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி நடந்தது.