திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்.. 7 மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம்

தீபத் திருவிழா நாளில் இருந்து அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் அதிக அளவில் வந்தவண்ணம் உள்ளனர்.;

Update:2025-12-07 15:23 IST

திருவண்ணாமலையில் உலகப் பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கி வருகிறது. கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். மேலும் விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும்.

அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா நேற்றுடன் நிறைவடைந்தது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் கடந்த 3-ம் தேதி கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் ஏற்றப்பட்டது. அன்று முதல் 11 நாட்கள் தொடர்ந்து மகா தீபம் காணப்படும். 

இதையொட்டி தீபத் திருவிழா நாளில் இருந்து அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அதிக அளவில் வந்தவண்ணம் உள்ளனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. தீபத் திருவிழா நாளில் கோவிலுக்கு வர முடியாத பக்தர்கள் பலர் இன்று வருகை தந்தனர். குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். இதனால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் வளாகத்தில் குவிந்தனர். அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர்.

ராஜகோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களின் வரிசையானது கோவில் வளாகம் மட்டுமின்றி கோவிலுக்கு வெளியே வட ஒத்தவாடை தெரு, தென் ஒத்தவாடை தெரு மற்றும் தேரடி வீதி என சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு நீண்டு காணப்பட்டது. பொது தரிசன வழியில் சென்ற பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய சுமார் 7 மணி நேரம் ஆனதாக தெரிவித்தனர்.

இதேபோல் பக்தர்கள் தொடர்ந்து கிரிவலம் சென்றவண்ணம் உள்ளனர். கிரிவலம் சென்ற பக்தர்கள் கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோலில்களில் சாமி தரிசனம் செய்தனர். இதனால் அஷ்டலிங்க கோவில்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதேபோல் காஞ்சி சாலை கிரிவல பாதையில் உள்ள இடுக்கு பிள்ளையார் கோவிலிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பக்தர்களின் வருகை அதிகரித்ததால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்