நாகர்கோவில் கள்ளியங்காடு சிவன் கோவிலில் கால பைரவர் ஜெயந்தி விழா
கால பைரவர் ஜெயந்தி விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.;
நாகர்கோவில் கள்ளியங்காடு சிவபுரம் சிவன் கோவிலில் கால பைரவர் ஜெயந்தி விழா மற்றும் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவின் தொடக்கமாக மேள தாளங்கள் முழங்க ஹோமம் நடைபெற்றது. காலை 10 மணிக்கு பூர்ணாஹுதி சிறப்பு நிகழ்ச்சியும், அலங்கார தீப ஆராதனை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
சிறப்பு ஹோமம் நிறைவடைந்த பின்னர் காலை 10.40 மணிக்கு ஸ்ரீ காலபைரவர் சுவாமிக்கு மஞ்சள், அரிசி மாவு, பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர், பழம் உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பிற்பகல் 12 மணிக்கு சிறப்பு அலங்காரம் அதனை தொடர்ந்து அலங்கார தீபாராதனை நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர் சிவபெருமானுக்கும் மீனாட்சி அம்மனுக்கும் பதிவு தீபாராதனை சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை திருவாசக சபை தலைவர் சின்னையன், செயலாளர் ராஜகோபால், பொருளாளர் சேகர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.