கார்த்திகை மாத பிறப்பு: சீர்காழி சட்டைநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு
கோபூஜையில் பங்கேற்ற பக்தர்கள், பசு மாட்டிற்கு பழங்கள், அகத்திக்கீரை வழங்கி வலம் வந்து வழிபட்டனர்.;
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் சுவாமி கோவிலில் கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு கோ பூஜை வழிபாடு நடந்தது.
முன்னதாக கொடிமரத்து விநாயகர், நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கோசாலையிலிருந்து வரவழைக்கப்பட்ட பசுமாடு மற்றும் கன்றுக்கு சிறப்பு பூஜை செய்து தீபாராதனை காட்டப்பட்டது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று பசு மாட்டிற்கு பழங்கள், அகத்திக்கீரை வழங்கி வலம் வந்து வழிபட்டனர். இதேபோல் காட்சி கொடுத்த நாயகர், 63 நாயன்மார்களுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.