சீனிவாசமங்காபுரத்தில் கார்த்திகை வனபோஜன உற்சவம்: 16-ந்தேதி நடக்கிறது
வனபோஜன உற்சவத்தின் ஒரு பகுதியாக பார்வேடு மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாண வெங்கடேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.;
திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் தெலுங்கு கார்த்திகை மாதத்தையொட்டி 16-ந்தேதி கார்த்திகை வனபோஜன உற்சவம் நடக்கிறது.
அதன் ஒரு பகுதியாக அன்று உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாண வெங்கடேஸ்வரர் காலை 7 மணியளவில் கோவிலில் இருந்து ஊர்வலமாக ஸ்ரீவாரிமெட்டு பகுதியில் உள்ள பார்வேடு மண்டபத்துக்குக் கொண்டு செல்லப்படுகிறார்கள். அங்கு வைத்து உற்சவர்களுக்கு காலை 9 மணியளவில் பூஜைகள் செய்யப்படுகின்றன.
தொடர்ந்து காலை 10 மணியில் இருந்து 11 மணி வரை ஸ்நாபன திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. அதன்பிறகு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் (போஜனம்) வழங்கப்படுகிறது. நிகழ்ச்சிகள் முடிந்ததும் மாலை உற்சவர்கள் ஸ்ரீவாரிமெட்டு பார்வேடு மண்டபத்தில் இருந்து மேள, தாளம் மற்றும் மங்கல வாத்தியங்கள் இசைக்க ஊர்வலமாக கோவிலுக்கு திரும்புகிறார்கள்.
இதனால் 16-ந்தேதி கோவிலில் வழக்கமாக நடக்கும் கல்யாணோற்சவம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.