திருப்பாவை சொற்பொழிவு நிறைவு.. திருப்பதியில் ஆண்டாள் திருக்கல்யாணம்
கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கிய திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மார்கழி கடைசி நாளான இன்றுடன் நிறைவு பெற்றன.;
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஆழ்வார் திவ்ய பிரபந்த திட்டத்தின் கீழ் புனித மார்கழி மாதத்தை கொண்டாடும் வகையில், நாடு முழுவதும் திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் புகழ்பெற்ற சொற்பொழிவாளர்கள் கலந்துகொண்டு திருப்பாவை சொற்பொழிவு நிகழ்த்தினர்.
நாடு முழுவதும் 233 மையங்களில் திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆந்திராவில் 76 மையங்களிலும், தெலுங்கானாவில் 57 மையங்களிலும், தமிழ்நாட்டில் 73 மையங்களிலும், கர்நாடகாவில் 21 மையங்களிலும், பாண்டிச்சேரியில் 4 மையங்களிலும், புதுதில்லியில் 4 மையங்களிலும், ஒடிசாவில் தலா ஒரு மையத்திலும் திருப்பாவை சொற்பொழிவு நடத்தப்பட்டது. ஏழுமலையான் கோவிலில் மார்கழி மாதத்தில் சுப்ரபாதத்திற்கு மாற்றாக திருப்பாவை பாராயணம் செய்யப்பட்டது.
திருப்பதி கே.டி.சாலையில் உள்ள அன்னமாச்சார்யா காலமந்திரம் மற்றும் வரதராஜ சுவாமி கோவிலில் திருப்பாவை சொற்பொழிவு பாராயணம் நடைபெற்றது. கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சிகள் மார்கழி கடைசி நாளான இன்றுடன் நிறைவு பெற்றன.
மார்கழி மாத நிறைவு விழாவையொட்டி, திருப்பதி அன்னமாச்சார்யா கலாமந்திரத்தில் இன்று சுவாமி-ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி ஆண்டாள் (கோதை) மற்றும் ரங்கநாத சுவாமி உற்சவர்கள் மேடையில் எழுந்தருளினர். பின்னர், வேத மந்திரங்கள் முழங்க, அன்னமாச்சார்யா திட்டக் கலைஞர்களின் குரல் இசைக்கு மத்தியில் திருக்கல்யாணம் நடைபெற்றது.