தைப்பூச திருவிழா... தோரணமலை முருகன் கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சிகள் விவரம்
தைப்பூச தினத்தன்று காலையில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி திருக்கல்யாணம் நடக்கிறது.;
தென்காசி மாவட்டம் கடையம் அருகே தோரணமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. அகத்தியர், தேரையர் சித்தர்கள் வழிபட்ட ஆன்மிக சிறப்பு பெற்ற இந்த கோவிலில் தைப்பூச திருவிழா பிப்ரவரி 1-ந்தேதி விமரிசையாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.
தைப்பூச தினத்தன்று (1.2.2026) அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, முருகப்பெருமானுக்கு பூஜை நடக்கிறது. காலை 5.30 மணிக்கு கணபதி ஹோமமும், 8 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி திருக்கல்யாணமும் நடக்கிறது. திருக்கல்யாணத்தை கணேச சிவாச்சாரியார், ஈஸ்வரன் சர்மா நடத்தி வைக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்ய உள்ளனர்.
திருக்கல்யாண உற்சவத்தைத் தொடர்ந்து, ஊட்டி திருக்குந்த சப்பை படுகர் இன மக்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடக்கிறது. மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை நடக்க உள்ளது. பக்தர்கள் எடுத்து வரும் பால்குடங்கள் மூலம் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.
மாலை 6 மணிக்கு கோவில் அடிவாரத்தில் மகா சரவண ஜோதி ஏற்றப்படுகிறது. இரவு 7 மணிக்கு முத்துமாலைபுரம் ஆதிநாராயணன்-சந்திராலீலா நினைவு மாலை நேர கட்டணமில்லா படிப்பக மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும், வள்ளியம்மாள்புரம் திருமுருகன் உயர்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். காலை முதல் இரவு வரை தொடர் அன்னதானமும் வழங்கப்படுகிறது.