திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: பூத வாகனத்தில் சந்திரசேகரர் வீதிஉலா
இரவில் பஞ்சமூர்த்திகள் வாகனங்களில் எழுந்தருளி கோவில் மாடவீதிகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.;
பூத வாகனத்தில் சந்திரசேகரர் வீதி உலா
சிறப்பு யாகசாலை பூஜை
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 2-ம் நாள் உற்சவமாக நேற்று முன்தினம் இரவு பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், பராசக்தி அம்மன் ஆகியோர் வெள்ளி விமானங்களிலும், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர் வெள்ளி இந்திர வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் மர விமானத்திலும் எழுந்தருளி மாடவீதியை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
3-ம் நாளான நேற்று காலை 10 மணியளவில் விநாயகரும், அம்பாளுடன் சந்திரசேகரரும் அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். அங்கிருந்து வந்து ராஜகோபுரம் எதிரே உள்ள 16 கால் மண்டபத்தில் தயாராக இருந்த மூஷிக வாகனத்தில் விநாயகரும், பூத வாகனத்தில் அம்பாளுடன் சந்திரசேகரரும் எழுந்தருளினர். அங்கு சாமிக்கு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் மேள தாளங்கள் முழங்க விநாயகரும், அதன்பின்னர் சந்திரசேகரரும் கோவிலில் இருந்து பக்தர்கள் வெள்ளத்தில் மாடவீதிகளை வலம் வந்து அருள்பாலித்தனர். மாட வீதிகளில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளின் அருகே சாமி வந்ததும் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.
மேலும் கோவிலில் 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு சிறப்பு யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து காலையில் 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தீபத் திருவிழாவின் 3-ம் நாள் விழாவின் போது பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக பிரார்த்தனை உண்டியல் வைக்கப்படும். அதன்படி 3-ம் நாள் விழாவான நேற்று காலை கோவிலில் பிரார்த்தனை உண்டியல் கோவில் கொடிமரம் அருகில் வைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் நகர முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு உண்டியலில் காணிக்கை செலுத்தினர். தொடர்ந்து பக்தர்கள் பலர் பிரார்த்தனை உண்டியலில் காணிக்கை செலுத்தினர். மேலும் கோவில் கலையரங்கத்தில் அரசு பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், பரதநாட்டியம், பக்தி சொற்பொழிவு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இரவு 10 மணியளவில் நடைபெற்ற உற்சவத்தில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் சிம்ம வாகனம் மற்றும் வெள்ளி அன்ன வாகனத்தில் எழுந்தருளி கோவில் மாடவீதிகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.