இலங்கையில் கனமழை வெள்ளத்தால் 56 பேர் உயிரிழப்பு - பிரதமர் மோடி இரங்கல்
இலங்கை மக்களுக்காக இந்தியாவில் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.;
புதுடெல்லி,
இலங்கையில் கடந்த 17-ந்தேதி முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறின. மேலும் அம்பாறை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதற்கிடையில், டித்வா புயல் காரணமாக இலங்கையில் ஏற்பட்ட கனமழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் இந்தியாவில் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “டித்வா புயல் காரணமாக இலங்கையில் ஏற்பட்ட கனமழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களின் விரைவில் நலம்பெற பிரார்த்தனை செய்கிறேன்.
இந்தியாவின் கடல்சார் அண்டை நாடான இலங்கையின் மக்களுக்கு உதவிடும் வகையில், ‘ஆபரேஷன் சாகர் பந்து’ மூலம் இந்தியாவில் இருந்து நிவாரணப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் சூழலுக்கு ஏற்றவாறு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக டித்வா புயலால் ஏற்பட்ட சேதங்களை சமாளிக்க இலங்கைக்கு உதவுவதற்காக 'ஆபரேஷன் சாகர் பந்து' தொடங்கப்படுவதாக வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் அறிவித்தார். இதன்படி இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். விக்ராந்த் மற்றும் ஐ.என்.எஸ். உதய்கிரி ஆகிய கப்பல்கள் மூலம் இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பி வைக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.