பெரும்பிடுகு முத்தரையரின் நினைவு தபால் தலை: சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்
இந்தியா ‘விக்சித் பாரத்’ நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது என்று துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.;
புதுடெல்லி,
தமிழக மன்னர் பெரும்பிடுகு முத்தரையரின் நினைவாக தபால்தலை வெளியிட வேண்டும் என முத்தரையர் சமுதாயம் சார்பில் நீண்டகாலமாக கோரிக்கை இருந்து வந்தது. தமிழக அரசு சார்பில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் இது தொடர்பாக சமீபத்தில் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூக்கு கடிதம் எழுதியிருந்தார். இதற்கிடையே தமிழக பா.ஜனதா தலைவர் நயினார் நாகேந்திரனும் முயற்சிகள் மேற்கொண்டார்.
இந்த நிலையில் பெரும்பிடுகு முத்தரையரின் நினைவு தபால் தலை வெளியீட்டு விழா டெல்லி இன்று நடைபெற்றது. இதில் தபால் தலையை துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்டார். அதன்பின்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-
பிரதமர் மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், தமிழ் மொழி மற்றும் பண்பாட்டிற்கு மத்திய அரசு தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகிறது. காசி தமிழ் சங்கமம் போன்ற முயற்சிகளையும், இதுவரை உரிய அங்கீகாரம் பெறாத தமிழ் அரசர்கள், தலைவர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களை அடையாளம் கண்டு கவுரவிக்கும் முயற்சிகளுக்கு எனது பாராட்டுகள்.
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் நினைவுத் தபால் தலையை வெளியிட்டது தொடர்ச்சியான அங்கீகார முயற்சிகளின் ஒரு பகுதியாகும். இந்தியா ‘விக்சித் பாரத்’ நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், மறைக்கப்பட்டத் தலைவர்களை அங்கீகரிப்பது நாட்டின் பண்பாட்டு பெருமையை மீட்டெடுக்க உதவும் என அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை மந்திரி எல்.முருகன், தமிழக பா.ஜனதா தலைவர் நயினார் நாகேந்திரன், ராஜ்ய சபா துணைத் தலைவர் ஹரிவன்ஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.