ஆந்திர பிரதேசம்: பெரிய அளவில் எரிவாயு கசிவு, தீ விபத்து; மக்கள் அச்சம்
விவசாய நிலம் அருகே இந்த தீ விபத்து ஏற்பட்டது என தகவல் தெரிவிக்கின்றது.;
விசாகப்பட்டினம்,
ஆந்திர பிரதேசத்தின் அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தில் மாளிகைப்பரம் மண்டலத்திற்கு உட்பட்ட இருசுமந்தா கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. குழாய் செல்லும் வழியில் திடீரென பெரிய அளவில் எரிவாயு கசிவு ஏற்பட்டது. தொடர்ந்து தீ விபத்தும் ஏற்பட்டது.
இதனால், அந்த கிராமத்தில் வசிக்கும் மக்கள் பதற்றமும், அச்சமும் அடைந்தனர். இதுபற்றி தீயணைப்பு துறை அதிகாரி பாலகிருஷ்ணா செ கூறும்போது, இருசுமந்தா கிராமத்தில் மிகப்பெரிய அளவில் எரிவாயு கசிவு ஏற்பட்டது. இந்த சம்பவம் பற்றி உள்ளூர்வாசிகள் ஓ.என்.ஜி.சி. அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து, ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள், தீயணைப்பு மற்றும் காவல் துறையினருடன் சேர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர் என கூறினார்.
சம்பவத்தின்போது யாரும் அருகே இல்லை. அதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விவசாய நிலம் அருகே இந்த தீ விபத்து ஏற்பட்டது என தகவல் தெரிவிக்கின்றது. இந்த பகுதியில் இதற்கு முன்பும் இதேபோன்ற எரிவாயு கசிவு ஏற்பட்டு, தீ விபத்து சம்பவமும் ஏற்பட்டு உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்கும்படி அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.