பீகாரில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு; 5 மணி நிலவரப்படி 67.14 சதவீத வாக்குகள் பதிவு
பீகார் சட்டசபை தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது.;
பாட்னா,
பீகார் சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாக நடக்கிறது. 243 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில், முதல்கட்டமாக 121 தொகுதிகளில் கடந்த 6-ந் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. இதுவரை இல்லாத அளவாக 65.08 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில், மீதி உள்ள 122 சட்டசபை தொகுதிகளில் இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு விறு விறுப்புடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் காலையில் இருந்தே ஆர்வமுடன் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.
இந்நிலையில் காலை 9 மணி நிலவரப்படி 14.55 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், காலை 11 மணி நிலவரப்படி 31. 38 சதவீத வாக்குகள் பதிவாகின. காலையில் இருந்தே வாக்குப்பதிவை செலுத்த மக்கள் ஆர்வமுடன் வந்துகொண்டே இருக்கின்றனர். மதியம் 1 மணி நிலவரப்படி 47. 62 சதவீத வாக்குகள் பதிவானது.
இந்நிலையில், பிற்பகல் 3 மணி நிலவரப்படி 60.40 சதவீத ஓட்டுகள் பதிவானது. தொடர்ந்து 5 மணி நிலவரப்படி 67.14 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பீகாரில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
20 மாவட்டங்களில் அடங்கி உள்ள இத்தொகுதிகளில் 1,302 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் 3 கோடியே 70 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 45 ஆயிரத்து 399 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் 14-ந் தேதிநடக்கிறது. ஆட்சியை பிடிப்பது எந்த கூட்டணி என்று அப்போது தெரிய வரும்.
இடைத்தேர்தல்கள்
பீகார் சட்டசபை தேர்தலுடன், ஒடிசா மாநிலம் நுவபடா சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலும் இன்று நடக்கிறது. பிஜு ஜனதாதளம் எம்.எல்.ஏ. ராஜேந்திர டோலகியா மரணம் அடைந்ததால் இடைத்தேர்தல் நடக்கிறது.தெலுங்கானா மாநிலம் ஜூபிளி ஹில்ஸ் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலும் இன்று நடக்கிறது.
ஜார்கண்ட் மாநிலம் காட்சிலா சட்டசபை தொகுதி, காஷ்மீரின் ஜம்மு பகுதியில் உள்ள நக்ரோடா சட்டசபை தொகுதி ஆகியவற்றிற்கும் இன்று இடைத்தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது.