டெல்லி செங்கோட்டை பயங்கரவாத குண்டுவெடிப்பு வழக்கு; 7 குற்றவாளிகளின் நீதிமன்ற காவல் ஜனவரி 8 வரை நீட்டிப்பு
டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு, ஜெய்ஷ் இ முகமது நிதியுதவி செய்துள்ளது என்ற அதிர்ச்சி தகவல் உளவுத்துறை விசாரணையில் வெளியாகி உள்ளது.;
புதுடெல்லி,
டெல்லி செங்கோட்டை எதிரே கடந்த நவம்பர் 10-ந்தேதி நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 15 பேர் கொல்லப்பட்டனர். 30 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து முதலில் டெல்லி போலீசார் விசாரணை நடத்தினார்கள். பின்னர் உள்துறை மந்திரி அமித்ஷா உத்தரவை தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமையினர் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்கள்.
இந்த வழக்கில் இதுவரை 3 டாக்டர்கள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கார் வெடிப்பு தாக்குதலை தலைமை தாங்கி நடத்திய டாக்டர் உமர் முகமது சம்பவ இடத்திலேயே பலியாகி விட்டார். இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட பலரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சம்பவத்திற்கு ஜெய்ஷ் இ முகமது நிதியுதவி செய்துள்ளது என்ற அதிர்ச்சி தகவல் உளவுத்துறை விசாரணையில் வெளியாகி உள்ளது. இந்த சூழலில், டெல்லி செங்கோட்டை பயங்கரவாத குண்டுவெடிப்பு வழக்கில் 7 குற்றவாளிகளின் நீதிமன்ற காவலை ஜனவரி 8-ந்தேதி வரை நீட்டித்து சிறப்பு என்.ஐ.ஏ. கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
இதன்படி டாக்டர் அடீல் அகமது, டாக்டர் ஷாஹீன் சயீதா, டாக்டர் முசாமில், அமீர் ரஷீத் அலி, ஜசீர் பிலால் வானி என்ற டேனிஷ், சோயப் மற்றும் முப்தி இர்பான் ஆகிய 7 பேரின் காவல் நீட்டிக்கப்படுகிறது.