சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை; 24-ந்தேதி முதல் இடைநிலை ஆசிரியர்கள் தொடர் வேலைநிறுத்தம்
கோரிக்கை அட்டை அணிந்து நாளை முதல் பணிக்கு செல்வது என முடிவு செய்திருக்கிறோம் என ராபர்ட் கூறினார்.;
சென்னை,
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 2009-ம் ஆண்டு மே 31-ந்தேதி பணியில் சேர்ந்த அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1-ந்தேதி பணிநியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளது. இதனால் சுமார் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்த ஊதிய முரண்பாட்டை நீக்கி, ‘சம வேலைக்கு சம ஊதியம்' வழங்கக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.
இதுதொடர்பாக இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்.எஸ்.டி.ஏ.) மாநில பொதுச்செயலாளர் ராபர்ட் கூறும்போது, எங்கள் கோரிக்கை இதுவரை தீர்க்கப்படவில்லை. அடுத்தகட்டமாக 3 கட்டங்களாக எங்கள் போராட்டங்களை முன்னெடுக்க இருக்கிறோம். முதல்கட்டமாக நாளை (திங்கட்கிழமை) முதல் கோரிக்கை அட்டை அணிந்து பணிக்கு செல்வது எனவும், 2-ம் கட்டமாக 5-ந்தேதி சென்னையில் பேரணி நடத்துவது எனவும் முடிவு செய்திருக்கிறோம்.
அதன் பிறகும் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் இறுதியாக 24-ந்தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். எனவே, தமிழக முதல்-அமைச்சர் இந்த பிரச்சினையில் தலையிட்டு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என கூறினார்.