செல்போனில் பேசிக்கொண்டே அரசு பஸ்சை இயக்கிய டிரைவர்: பயணிகள் அச்சம்
நெல்லையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு நேற்று அரசு பஸ் ஒன்று 40 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.;
நெல்லை
நெல்லையிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி நேற்று அரசு பஸ் ஒன்று 40 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் தனது செல்போனில் வந்த அழைப்பை எடுத்து பேசத் தொடங்கினார். சுமார் 10 நிமிடங்களுக்கும் மேலாக அவர் ஒரு கையில் செல்போனையும், மற்றொரு கையில் ஸ்டியரிங்கையும் பிடித்துக் கொண்டு பஸ்சை கவனக்குறைவாக இயக்கியுள்ளார். இதனை அந்த பஸ்சில் சென்ற பயணி ஒருவர் தனது செல்போன் மூலம் வீடியோ எடுத்து வைத்துள்ளார்.
சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், டிரைவர் செல்போனில் பேசிக்கொண்டே சாலையை சரிவர கவனிக்காமல் வாகனம் ஓட்டுவது தெளிவாகத் தெரிந்தது. அதிவேகமாக சென்று கொண்டிருந்த பஸ்சில் இடம்பெற்ற இந்த அலட்சியமான செயல் பயணிகளிடையே பெரும் அதிருப்தியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது.
தமிழகம் சாலை விபத்துகளில் உயிரிழப்போர் எண்ணிக்கையில் நாடு முழுவதும் முன்னிலையில் உள்ளது. இதுபோன்ற சூழலில், அரசு பஸ் டிரைவரின் பொறுப்பற்ற செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது என சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட வீடியோக்களுக்கு பொதுமக்களும் பயணிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் அலட்சியமாக நடந்துகொண்ட டிரைவர் மீது போக்குவரத்துத்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.