நாடாளுமன்றம் நாளை கூடுகிறது; 10 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்
விடுமுறை நாட்கள் நீங்கலாக 15 அமா்வுகள் இந்த கூட்டத் தொடரில் இடம்பெற உள்ளன.;
புதுடெல்லி,
பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் நாளை (1-ந்தேதி) தொடங்கு கிறது. வருகிற 19-ந் தேதி வரை இந்த கூட்டம் நடைபெறுகிறது.விடுமுறை நாட்கள் நீங்கலாக 15 அமா்வுகள் இந்த கூட்டத் தொடரில் இடம்பெற உள்ளன. 12 மாநிலங்களில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.), டெல்லி குண்டு வெடிப்பு, வாக்கு திருட்டு, டெல்லி காற்று மாசு, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து அவையில் விவாதிக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு விவாதிக்க மறுக்கும் என்பதால் இரு அவைகளிலும் கடும் அமளி ஏற்படும் வாய்ப்பு உள்ளது. திமுக, திரிணாமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் வாக்காளர் தீவிர திருத்தம் தொடர்பான பிரச்சினையை முன்வைப்பார்கள். கடந்த ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடைபெற்ற மழைக்கால கூட்டத் தொடரில் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், ‘ஆபரேஷன் சிந்தூர்’, பகல்காம் தாக்குதல் உள்ளிட்ட விவகாரங்களுக்கான விவாதம் எதிர்க்கட்சிகளின் அமளியால் பாதிக்கப்பட்டது. மழைக்கால கூட்டத் தொடரில் மக்களவையின் செயல்பாடு 31 சதவீதமாகவும், மேல்சபையின் செயல்பாடு 39 சதவீதமாகவும் இருந்தது.
குளிர்கால கூட்டத் தொடரில் சிவில் அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி வழங்குவது, இந்திய உயர்கல்வி ஆணையம் அமைப்பது, பெருநிறுவன சட்டம் மற்றும் பங்குச் சந்தை உள்ளிட்ட 10 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 10 மசோதாக்களில் 4 நிதித்துறை தொடர்புடையவை, 2 சட்டம் மற்றும் நீதித்துறை தொடர்புடையவை. கல்வி, எரிசக்தி, போக்குவரத்து துறை, உள்துறை ஆகியவற்றைச் சேர்ந்த தலா ஒரு மசோதாவும் அடங்கும்.
வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு கொண்டாடப்படுவதால், அதன் வரலாறு குறித்த விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பாடலில் இருந்து முக்கிய வரிகள் 1937ஆம் ஆண்டு நீக்கப்பட்டதே இந்தியாவின் பிரிவினைக்கு காரணம் என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டியிருந்தார். வந்தே மாதரம் பாடலின் வரலாறு, சுதந்திர இயக்கத்தில் அதன் பங்கு குறித்து இளைஞர்களுக்கு நினைவூட்டுவதற்காக விவாதம் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.