கவர்னர்கள், மசோதாக்களை காலவரையின்றி வைத்திருக்க முடியாது: ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி கவாய்

அதிகமான காலதாமதத்துக்கு நீதித்துறை மறுஆய்வு உள்ளது என்று ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி கவாய் கூறினார்.;

Update:2025-11-24 07:39 IST

புதுடெல்லி,

தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஏராளமான மசோதாக்களை கவர்னர் கிடப்பில் போட்டிருந்ததால், மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டை நாடியது. இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, மாநில அரசுகள் நிறைவேற்றும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என கவர்னர் மற்றும் ஜனாதிபதிக்கு காலக்கெடு விதித்து உத்தரவிட்டு இருந்தது.

இதில் 14 கேள்விகளை எழுப்பி ஜனாதிபதி கேட்டிருந்த விளக்கம் தொடர்பாக 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. இதில் கடந்த 20-ந்தேதி தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், மசோதாக்கள் மீது முடிவு எடுப்பது தொடர்பாக கவர்னர் மற்றும் ஜனாதிபதிக்கு காலக்கெடு விதிக்க முடியாது என தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பு வழங்கிய அமர்வுக்கு தலைமை வகித்தவரும், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியுமான கவாய், நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார். இதையொட்டி தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது இது தொடர்பாக கவாய் கூறியதாவது:-

மசோதாக்கள் மீது முடிவு எடுக்கும் விவகாரத்தில் காலக்கெடுவை மட்டும் தளர்த்தி இருக்கிறோம். அதேநேரம் கவர்னர்கள் மசோதாக்கள் மீது முடிவு எடுக்காமல் காலவரையின்றி வைத்திருக்க முடியாது எனக்கூறி இந்த தீர்ப்பை சமநிலைப்படுத்தி இருக்கிறோம். காலக்கெடு இல்லாத இடங்களில் கோர்ட்டுகள் அதை விதிப்பதற்கு அரசியல்சாசனம் அனுமதிக்கவில்லை. ஆனால் கவர்னர் காலவரையின்றி முடிவு எடுக்காமல் இருக்க முடியாது. அதிகமான காலதாமதத்துக்கு நீதித்துறை மறுஆய்வு உள்ளது. இவ்வாறு நீதிபதி கவாய் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்