கள்ளக்காதலனுக்கு பணக் கஷ்டம்... தங்கச் சங்கிலிக்காக தாயை கொலை செய்த மகள் - அதிர்ச்சி சம்பவம்

கள்ளக்காதலனுக்கு உதவி செய்ய விரும்பிய சந்தியா தனது தாயிடம் தங்கச் சங்கிலியை கேட்டுள்ளார்.;

Update:2025-11-26 16:50 IST

திருச்சூர்,

கேரள மாநிலம் திருச்சூரில் தங்கச் சங்கிலிக்காக தாயை மகள் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முண்டூரைச் சேர்ந்த தங்கமணி என்ற பெண் அவரது வீட்டின் பின்புறம் உள்ள இடத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவரது முகத்தில் காயங்கள் இருந்தன. அவர் கீழே விழுந்து இறந்திருக்கலாம் என்று போலீசார் முதலில் சந்தேகித்தனர். பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் அவர் கொலை செய்யப்பட்டதாக தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது தங்கமணி கழுத்தில் எப்போதும் ஒரு தங்கச் சங்கிலி அணிந்திருப்பார். ஆனால் அவர் இறந்து கிடந்த அன்று அவரது கழுத்தில் தங்கச் சங்கிலி இல்லை என்று அக்கம் பக்கத்தினர் போலீசாரிடம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து தங்கமணியின் மகள் சந்தியாவிடம் (45 வயது) போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், கணவரை பிரிந்து தாயுடன் வசித்து வந்த சந்தியாவுக்கு, அந்த பகுதியில் வசிக்கும் நிதின் (29 வயது) என்ற வாலிபருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நிதினுக்கு பணக் கஷ்டம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு உதவி செய்ய விரும்பிய சந்தியா தனது தாயிடம் அவரது தங்கச் சங்கிலியை கேட்டுள்ளார். இதற்கு தங்கமணி மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான வாக்குவாதத்தின்போது ஆத்திரமடைந்த சந்தியா தனது தாயை கழுத்தைப் பிடித்து நெரித்து கீழே தள்ளியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த தங்கமணி உயிரிழந்துள்ளார். பின்னர் சந்தியாவும், நிதினும் சேர்ந்து அவர் தவறி விழுந்து உயிரிழந்தது போல சித்தரிக்க முயற்சி செய்துள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. இதையடுத்து சந்தியா மற்றும் நிதினை போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்