ப்ளூபேர்ட் திட்டம் வெற்றி: ககன்யான் திட்டத்தின் மீதான நம்பிக்கை மேலும் அதிகரிப்பு - இஸ்ரோ தலைவர் பேட்டி
எல்விஎம்-3 எம்6 ராக்கெட் ஏவப்பட்டது இந்தியாவிற்கு ஒரு புதிய மைல்கல் சாதனையாகும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறியுள்ளார்.;
பெங்களூரு,
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் (இஸ்ரோ) இருந்து அமெரிக்காவின் ஏஎஸ்டி ஸ்பேஸ்மொபைல் நிறுவனத்தின் ப்ளூபேர்ட்-6 எனும் நவீன தகவல்தொடர்பு செயற்கைக்கோள், இஸ்ரோவின் எல்விஎம்-3 எம்6 ராக்கெட் மூலம் இன்று காலை 8.54 மணியளவில் விண்ணில் ஏவப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, தரையில் இருந்து புறப்பட்டு 15 நிமிஷம் 52 வது வினாடியில், 520 கி.மீ உயரத்தில், புவியின் தாழ் வட்ட சுற்றுப் பாதையில் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
இந்த ராக்கெட் ஏவப்பட்டது இந்தியாவிற்கு ஒரு புதிய மைல்கல் சாதனையாகும். இந்திய மண்ணிலிருந்து இதுவரை ஏவப்பட்ட மிகப்பெரிய செயற்கைக்கோள் இது.
இந்தப் பணியின் மூலம், இந்தியா இப்போது 34 நாடுகளைச் சேர்ந்த 434 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவிய பெருமையையும் பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ககன்யான் திட்டத்தின் மீதான நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது. 2017 முதல் இன்று வரை, எல்.வி.எம்-3 ராக்கெட் மூலம் மேற்கொள்ளப்பட்ட அனைத்து ஏவுதலும் 100 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது. ககன்யான் திட்டத்தின் மனித மதிப்பீட்டு நிலைக்கு நாங்கள் ஒதுக்கியுள்ள அதே ராக்கெட் இது. இந்த வெற்றி ககன்யான் திட்டத்தைத் தொடர மேலும் நம்பிக்கையை அளிக்கிறது.
சந்திரயான் 4 மற்றும் 5 அங்கீகரிக்கப்பட்ட திட்டங்கள். வலிமை வலிமையை மட்டுமே மதிக்கிறது என்று ஒரு பழமொழி உண்டு. நாம் சந்திரயான்-3 ஐ நிறைவேற்றியபோது, ஜப்பான் எங்களுடன் ஒத்துழைக்க விரும்பியது. இது ஒரு சிறிய விஷயம் அல்ல.
தொழில்நுட்ப ரீதியாக வளர்ந்த நாடு எங்களுடன் ஒத்துழைக்க விரும்பியது இன்று, ஒரு இந்தியனாக நான் பெருமையுடன் சொல்ல முடியும், விண்வெளிப் பயணத்தில் சாதனை படைத்த நாடுகளுடன் நாம் தோளோடு தோள்கோர்த்து நிற்பது பெருமையான விஷயம்.
இவ்வாறு அவர் கூறினார்.