பக்தர்கள் வருகை அதிகரிப்பு: சபரிமலையில் தினமும் 3 லட்சம் டின் அரவணை விற்பனை
அரவணை பிரசாதம் இருப்பு குறைந்து வருவதால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.;
சபரிமலை,
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகர விளக்கையொட்டி நடை திறக்கப்பட்ட நாள் முதல் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். கோவிலில் நேற்று வரை 3 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த போலீசாரும், சிறப்பு பாதுகாப்பு படை வீரர்களும் பல்வேறு குழுக்களாக, ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறார்கள்.
நடப்பு மண்டல சீசனில் 1.50 கோடி அரவணை பிரசாதம் விற்பனையானது. தற்போது மகரவிளக்கையொட்டி தினசரி 3 லட்சத்திற்கும் அதிகமான அரவணை பிரசாதம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது 14 லட்சம் டின் அரவணை மட்டுமே இருப்பு உள்ளது. இதனால் அரவணை பிரசாதம் பக்தர்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மகரவிளக்கை யொட்டி வருகிற 19-ந் தேதி வரையில் பூஜைகள் நடைபெறும் என்பதால் மேலும் 80 லட்சம் டின் அரவணை தேவைப்படும். இதனை கருத்தில் கொண்டு அரவணை உற்பத்தியை மேலும் அதிகரிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மண்டல சீசனில் கிடைத்த மொத்த வருவாய் ரூ.332 கோடி ஆகும். இதில் 50 சதவீத வருமானம் அரவணை விற்பனை மூலமாக கிடைத்தது குறிப்பிடத்தக்கது.