3,500 கிலோ மீட்டர் இலக்குகளை தாக்கும்.. நீர்மூழ்கி கப்பல் ஏவுகணை சோதனை வெற்றி
நீருக்கடியில் இருந்து அணு ஆயுத தாக்குதல்களை நடத்தும் திறனை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஏவுகணை இந்திய கடற்படைகளுக்கு மிகவும் பேருதவியாக இருக்கும்;
புதுடெல்லி,
நீர்மூழ்கி கப்பலில் இருந்து 3,500 கி.மீ. தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கும் வகையில் கே-4 பாலிஸ்டிக் எனும் ஏவுகணை இந்திய பாதுகாப்புத்துறையால் வடிவமைக்கப்பட்டுள்ளது.அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பலான ஐ.என்.எஸ். அரிகாட்டில் இருந்து இந்தியா, இந்த ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்துள்ளது. இந்த சோதனை விசாகப்பட்டினம் கடற்கரையில் நடந்தது.
நீருக்கடியில் இருந்து அணு ஆயுத தாக்குதல்களை நடத்தும் திறனை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஏவுகணை இந்திய கடற்படைகளுக்கு மிகவும் பேருதவியாக இருக்கும்.இந்த ஏவுகணை சோதனை வெற்றி, இந்திய கடற்படையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம், நிலம், வான் மற்றும் நீருக்கடியில் தளங்களில் இருந்து அணு ஆயுதத்தை ஏவும் திறன் கொண்ட உலக நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.